Tuesday 31 January 2017

தேசிய இனப் பிரச்சினை பற்றி...


தேசிய இனப் பிரச்சினை பற்றி...

விலை: 120/-
புதுமை பதிப்பகம்
7200260086

பாட்டாளி வர்க்கத்தின் தேசியக் கொள்கை

தேசமும் தேசிய இனமும்

தேசம் என்பது என்ன? “ஒரு தேசம் என்பது ஒரு பொதுவான மொழி, ஆட்சிப் பகுதி, பொருளாதார வாழ்வு மற்றும் மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகமாகும்” என்று ஸ்டாலின் மிகச் சரியாக வரையறுத்துக் கூறியுள்ளார். இத்தகைய தேசம் முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்தின் மீது வெற்றி கொள்ளும் காலகட்டத்திலேயே அமைகிறது. ஆனால் தேசிய இனம் என்பது இதற்கு முந்தியதாகும்.

பழங்குடி (Tribes) மக்கள் சமூக அமைப்பிலிருந்து முதலாவது வர்க்க சமுதாயம் தோன்றியபோது தேசிய இனங்கள் அமைந்தன. அதாவது மக்கள் முதல் முதலாக ஒரு பொது மொழியுடன் ஒரு பிரதேச அடிப்படையிலான மக்கள் சமூகங்களாக அமைந்தபோது அவர்கள் தேசிய இன சமூகங்களாயினர். எனவே தேசிய இனம் என்பது ஒரு பொதுமொழி கொண்ட ஒரு பிரதேச அடிப்படையில் வாழ்கின்ற நிலையான மக்கள் சமூகமாகும். முதலாவது தேசிய இனம் அடிமை பிரபுக்களைக் கொண்டது. அதற்கடுத்த நிலவுடமை சமூக தேசிய இனங்கள் மத்திய காலத்தில் அமைந்தன. பழங்குடி அமைப்புகளிலேயே பொதுமொழி ஒன்று உருவாகி இருக்கும் என்றும் பிரதேச அடிப்படையிலான ஒரு சமூகமாக உருவாவது வர்க்க சமுதாயத்தின் தோற்றத்துடன்தான் என்பதால் முதலாவது புரதான தேசிய இனத்தின் தோற்றம் புராதன அடிமை சமுதாயத்துடன் இணைந்துள்ளது.

தேசிய இனத்திற்கும் தேசத்திற்கும் இடையிலான முக்கியமான வேறுபாடு பொதுமொழி, பொது பிராந்தியம் என்பதுடன் ஒரு பொதுவான பொருளாதார வாழ்வு என்ற அம்சமும் இணைவதாகும். இது நிலப்பிரபுத்துவத்தின் மீது முதலாளித்துவம் வெற்றி கொள்ளும்போது ஏற்படுகிறது அதற்கு முன்னதாக அல்ல.

தொல்குல சமூக அமைப்பின் அழிவில், அடிமை உடமை சமூக அமைப்பும்; அடிமை உடைமை சமுதாய அமைப்பின் அழிவில், நிலவுடைமைச் சமுதாய அமைப்பும் தோன்றிய காலகட்டத்தின் வரலாற்று வகையினம் தேசிய இனம் என்றால், நிலப்பிரபுத்துவத்தின் அழிவின் மேல் முதலாளித்துவம் வெற்றிகொள்ளும் கால கட்டத்தின் வரலாற்று வகையினமே தேசம் ஆகும். தேசத்தின் தோற்றம் இதுவரை துண்டு துண்டாக சிதறிக் கிடந்த மக்களின் பொருளாதார வாழ்க்கையை ஒரு பொது மொழிப் பிரதேசத்திற்குள் ஒருங்கிணைந்ததாக, அதிகபட்ச வேலைப் பிரிவினையுடனும், சுதந்திரமான, வர்க்கப் பகுப்புடனும் ஒரு நவீன தேசத்திற்கான ஒரு பொதுவான பொருளாதார வாழ்வாக உருமாறுகிறது.

இவ்விதம் அமையும் தேசத்தில் இருவகைக் கூறுகள் உள்ளடங்கியுள்ளன. முதலாவது - இனக்கூறு; இரண்டாவது - சமுதாயக்கூறு; பொதுமொழியும், பிரதேசமும் இனக்கூறாகும். இதில் மொழியே பிரதானமானது. நிலப்பிரபுத்துவ பொருளாதாரத்தினை வெற்றி கொள்ளும் முதலாளித்துவப் பொருளாதார அமைப்பே சமுதாயக் கூறு ஆகும். இது முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளுற்பத்தி உறவுகளை - வர்க்க உறவுகளைக் குறிப்பிடுகிறது.

ஒரு தேசம் என்பது ஒரு பொதுமொழி இன்றி இருக்க முடியாது. அதே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பொதுமொழிகள் கொண்டதாகவும் இருக்க முடியாது. காரணம் வெவ்வேறு பொதுமொழிகள், வெவ்வேறு தேசிய இனங்களைக் குறிப்பவையாகும். அதே போல தேசம் என்பது ஒரு பொதுமொழியுடன் ஒரு ஒருங்கிணைந்த பொருளாதார வாழ்வைக் கொண்ட ஒரு பிரதேசம் இன்றி இருக்க முடியாது; அதே நேரத்தில் வெவ்வேறு தனித்தனியான பொருளாதார வாழ்வைக் கொண்ட தனித்தனியான பிரதேசங்கள் ஒரே மொழியின் காரணமாக ஒரே தேசமாக கருதப்படவும் முடியாது.

தேசிய இயக்கமும், தேசிய அரசும்:

“தேசிய இயக்கம் என்பது சாராம்சத்தில் முதலாளித்துவ இயக்கம் ஆகும்” என்றார் ஸ்டாலின். “உலகம் முழுவதும் முதலாளித்துவமானது இறுதி வெற்றி கொள்ளும் காலகட்டம் தேசிய இயக்கங்களுடன் இணைந்துள்ளது” என்றார் லெனின். உண்மையில் நிலப்பிரபுத்துவத்தின் மீதான முதலாளித்துவத்தின் வெற்றியும், தேசங்கள் உருவாக்கமும் தேசிய இயக்கங்களுடன் இணைந்ததாகும்.

தேசிய இயக்கம் என்பது என்ன? அது அடிப்படையில் நான்கு பண்புகளைக் கொண்டிருக்கிறது. முதலாவதாக ஒரு தேசிய இயக்கம் என்பது மொழி, கலை, இலக்கிய, கலாச்சார இயக்கமாகும். இரண்டாவதாக அது ஒரு விவசாயிகள் இயக்கமாகும்; மூன்றாவதாக அது ஒரு ஜனநாயக இயக்கமாகும். நான்காவதாக அது ஒரு தேசிய அரசை நிறுவுவதற்கான இயக்கமாகும். இவ்வாறு தேசிய இயக்கம் என்பது நான்கு பண்புக் கூறுகளைக் கொண்டிருக்கிறது.

நிலப்பிரபுத்துவத்தின் மீதான முதலாளித்துவத்தின் வெற்றி என்பது மூலதனத்தின் வெற்றியே. இதற்கு முதலாளிகள் விரிவான சந்தையைக் கைப்பற்ற வேண்டும். அதற்கு ஒரேமொழி பேசும் மக்களைக் கொண்ட, இணைந்த பிரதேசங்கள் அனைத்தையும் ஒரே அரசின் எல்லைக்குள் கொண்டு வர வேண்டும். அது மட்டுமின்றி சந்தை விரிவாக்கத்திற்கு மக்களிடையே - வாங்குவோருக்கும், விற்போருக்கும் இடையே, வேலை தருவோருக்கும், வேலை பெறுவோருக்கும் இடையே உற்பத்தியாளனுக்கும் நுகர்வோருக்கும் இடையே - நெருக்கமான தொடர்பும் சுதந்திரமான, விரிவான வர்க்கப் பகுப்புகளும் உருவாக மொழியின், அதன் இலக்கியத்தின் வளர்ச்சிக்கும், மறுமலர்ச்சிக்கும் உள்ள தடைகள் அகற்றப்பட வேண்டும். எனவேதான் லெனின் கூறினார் “மக்கள் தேசிய இன ரீதியில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நெருக்கமாக ஒருமுகப்பட்டிருப்பது முதலாளித்துவத்தின் நவீனத் தேவைகளில் ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை; ஏனெனில் உள்நாட்டுச் சந்தையை முழுமையாகக் கைப்பற்றுவதற்கும் பொருளாதார தொடர்புகளை முழுச்சுதந்திரமாக அனுபவிப்பதற்கும் முக்கியமாகத் தேவைப்படுவது தேசிய இனமும், மொழிவழிப் பகுப்பும் ஆகும்.” எனவே நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான முதலாளித்துவ இயக்கம் என்பது முதலாவதாக மொழி, கலை, இலக்கிய கலாச்சார மறுமலர்ச்சிக்கான இயக்கமாக இருக்கிறது என்பது தெளிவு.

நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான முதலாளித்துவத்தின் போராட்டம் தேசிய இன ஒருமைப்பாடு, விரிந்த, சுதந்திரமான வர்க்கப் பகுப்பு, மொழி இலக்கிய மறுமலர்ச்சி ஆகியவற்றுக்கு காரணமாய் இருப்பது மட்டுமன்றி அது இறுதியில் நிலப்பிரபுத்துவ அரசியல், பொருளாதார அமைப்புகள் அனைத்தையும் வீழ்த்துகிறது. இப்போராட்டத்தின் பரந்துபட்ட, மிகப் பின்தங்கிய மக்கள் பகுதியினர் உட்பட சகல பகுதி மக்களும் தமது அரசியல் உரிமைக்கான - தேசிய இன உரிமைக்கான போராட்டத்தில் ஈர்க்கப்பட்டு அரசியல் அரங்கிற்கு வருகின்றனர். வரலாறு காணாத அளவுக்கு இயக்கங்களில் பங்கேற்கின்றனர். அச்சு இலக்கியங்கள் பெருமளவுக்கு வெளியிடப்படுகின்றன. மக்கள் அமைப்புகளும், மக்கள் பிரதிநித்துவத்துவ சபைகளும் தோன்றுகின்றன. அரசியல் அமைப்புக்குட்பட்ட ஆட்சிமுறை தோன்றுகிறது. இவ்வாறு நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான முதலாளித்துவத்தின் போராட்டம் ஒரு முதலாளித்துவ ஜனநாயகத்துக்கான இயக்கமாகவும் இருக்கிறது.

மேலும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான முதலாளித்துவ இயக்கம் சாராம்சத்தில் விவசாயிகள் இயக்கமேயாகும். விவசாயிகள் பங்கேற்பின்றி முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்தின் மீது இறுதி வெற்றி கொள்ள முடியாது. ஸ்டாலின் கூறினார்: “தேசிய பிரச்சினையின் அடிப்படையும், சாரமும் விவசாயிகள் பிரச்சினையே என்பதில் ஐயமில்லை. இதிலிருந்து தேசிய இயக்கத்தின் முக்கியப் படை விவசாயிகளே என்பதும், விவசாயிகள் படையின்றி உண்மையான தேசிய இயக்கம் இருக்க முடியாது என்பதும் தெளிவு” தேசிய பிரச்சினை என்பது விவசாயிகள் பிரச்சினையுடன் தேசிய கலாச்சாரம், தேசிய அரசு போன்ற பிரச்சினைகளையும் உள்ளடக்கியது என்பது அவர் கூற்று. எனவே தேசிய இயக்கம் என்பது ஒரு விவசாயிகள் இயக்கமும் ஆகும் என்பதும் தெளிவு.

முதலாளித்துவத்தின் மிக மிக சுதந்திரமான, விரிவான வேகமான வளர்ச்சிக்கு வழிசெய்யும் கடமைப் பணிகளை மிகச் சிறப்பாக நிறைவேற்றவல்லது தேசிய அரசேயாகும். எனவேதான் “ஒவ்வொரு தேசிய இயக்கத்தின் போக்கும் நவீன முதலாளித்துவத்தின் தேவைகள் மிக நன்றாகப் பூர்த்தி செய்யப்பட வாய்ப்புள்ள தேசிய அரசுகள் அமைப்பதற்கான வழியிலானது. மிக மிக தீர்க்கமான பொருளாதாரக் காரணங்கள் இந்த இலக்கை நோக்கி இட்டுச்செல்கின்றன” என்றார் லெனின்.

உலகம் முழுவதும் முதன் முதலாக ஐரோப்பாவில், நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான தேசிய இயக்கங்கள் வெடித்து பிரிட்டன், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தேசிய அரசுகள் அமைந்தன.

இத்தகைய தேசிய அரசுகள் அமைவது மேற்கு ஐரோப்பாவுக்கு மட்டுமல்ல முதலாளித்துவக் காலகட்டத்தின் உலகம் முழுவதற்கும் பொதுவானதாகும் என்று லெனின் வலியுறுத்தினார். முற்றிலும் நிலப்பிரபுத்துவம் வீழ்த்தப்படாத எல்லா நாடுகளும் தேசிய அரசுகளை அமைப்பதை நோக்கிய தேசிய இயக்கங்களைக் கடந்தே சென்றாக வேண்டும் என்பது வரலாற்றின் விதியாகும். “மேற்கு ஐரோப்பியா முழுவதற்கும் ஏன் நாகரிக உலகம் முழுவதற்கும் தேசிய அரசு என்பது முதலாளித்துவக் காலகட்டத்தில் மாதிரிப் படிவமானது, வழக்கமானது” என்றார் லெனின். மேற்கு ஐரோப்பிய நாடுகளை மட்டுமின்றி ஆசியாவில் ஜப்பானையும், பால்கன் நாடுகளின் உதாரணங்களையும் எடுத்துக்காட்டி “சுதந்திரமான தேசிய அரசில் மட்டுமே பண்ட உற்பத்தியின் மிகவும் முழுமையான வளர்ச்சிக்கும், மிகச்சுதந்திரமான, விரிவான வேகமான முதலாளித்துவ வளர்ச்சிக்கும் தேவையான நிலைமைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன” என்றார். “முற்போக்கான நாகரிகமுற்ற மனித சமுதாயம் முழுவதன் உதாரணமும், பால்கன் நாடுகள், ஆசியா ஆகியவற்றின் உதாரணமும் தேசிய அரசு என்பது முதலாளித்துவத்தின் விதியும் பொதுவழக்கும் ஆகும்” என்பதைக் காட்டுகின்றன என்று மீண்டும் வலியுறுத்தினார். மேலும் ஆசியாவில் கூட முதலாளித்துவம் தேசிய இயக்கங்களைத் தோற்றுவித்திருக்கின்றன என்றும் “இவ்வியக்கங்களின் போக்கு ஆசியாவில் தேசிய அரசுகள் உருவாவதற்கு வழிசெய்வதற்கான பாதையை நோக்கிச் செல்லும் போக்கு” என்றும் அவர் கூறினார். 

நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான முதலாளித்துவ தேசிய இயக்கங்கள் மேற்கு ஐரோப்பாவில் தேசிய ஒருமை கொண்ட தேசிய அரசுகளை நிறுவின. அவை அந்நாடுகளில் தங்கு தடையற்ற விரிவான முதலாளித்துவ வளர்ச்சிக்கு வகை செய்தன. ஆனால் உலகம் முழுவதும் நிகழ்ச்சிகள் இம்முறையில் நடந்தேறவில்லை. முதலாளித்துவத்தின் முழு வளர்ச்சிக்கு முன்னதாகவே சில பெரிய தேசிய இனங்களும், ஏகாதிபத்தியங்களும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய, நிலப்பிரபுத்துவம் இன்னும் ஒழிக்கப்படாத முதலாளித்துவம் இன்னும் பலவீனமாக உள்ள, பொருளாதாரம் ஒருங்கிணைந்த இன்னும் தேசங்களாக உருவாகாத பலவீனமான தேசிய இனங்களைப் பலாத்காரமாக வென்று பின்தங்கிய பல்தேசிய அரசுகளையும், காலனிய அரசுகளையும் உருவாக்கின.

இவ்வாறு பலாத்காரமாக உருவாக்கப்பட்ட பல்தேசிய அரசுகளில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் தேசிய இயக்கங்கள் தமது சொந்த நிலப்பிரபுத்துவ சக்திகளை மட்டும் இன்றி வல்லாதிக்கம் செலுத்தும் ஒடுக்கும் தேசிய இன ஆளும் வர்க்கங்களையும் எதிர்க்க வேண்டியிருந்தது. ஏகாதிபத்தியங்களால் காலனியாக்கப்பட்ட நாடுகளில் தேசிய இயக்கங்கள் ஏகாதிபத்தியத்துக்கும் நிலப்பிரபுத்துவத்துக்கும் எதிராக இருந்தன.

எனினும் எல்லாவித தேசிய இயக்கங்களின் நோக்கமும் சுதந்திரமான, விரிவான முதலாளித்துவ வளர்ச்சிக்கு வகை செய்யும் தேசிய அரசு ஒன்றை நிறுவுவதேயாகும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. எனவேதான், “உலக வரலாற்றில் தேசிய அரசு என்பது ஒரு பொதுவழியாக இருக்கிறது” என்றும், “தேசங்கள் என்பவை சமுதாய வளர்ச்சியின் முதலாளித்துவ சகாப்தத்தில் தவிர்க்க முடியாதபடி உண்டாகிற ஒரு படைப்பு வடிவம்” என்றும், “எல்லா முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிகளிலும் சுயேச்சையான தேசிய அரசு அமைக்கப்படும் போக்கு காணப்படுகிறது” என்றும் லெனின் கூறினார்.

காலனி நாடுகளிலும், ஒடுக்கப்படும் தேசிய இனங்களிலும் எழுச்சியுறும் தேசிய இயக்கங்களின் நோக்கமும் தேசிய அரசை அமைப்பதுதான் என்பதும் அது ஒரு தேசிய விடுதலை யுத்தத்தின்மூலம் சாதிக்கப்பட முடியும் என்பதும் அதன் சிறப்புப் பண்புக்கூறு ஆகும்.

சோசலிசத்திற்கான போராட்டத்தில் 
பாட்டாளி வர்க்கத்தின் தேசிய திட்டம்

“தேசிய இனம் என்ற கோட்பாடு முதலாளித்துவ சமுதாயத்தில் வரலாற்று ரீதியில் தவிர்க்க முடியாதது என்பதையும் இந்த சமுதாயத்தை கணக்கில் கொண்டு தேசிய இயக்கங்கள் வரலாற்று ரீதியில் முறையானவை என்பதையும் மார்க்சியவாதிகள் ஏற்றுக் கொள்கிறார்கள்” சமுதாய வரலாற்றில் முதலாளித்துவ சகாப்தத்தில் தவிர்க்க முடியாத விதியாகிவிட்ட தேசிய இயக்கமும், தேசிய அரசும் வரலாற்று ரீதியில் ஆற்றும் முற்போக்கான, அவசியமான பாத்திரத்தையும் மார்க்சியவாதிகள் மறுக்கவில்லை. ஆனால் பாட்டாளி வர்க்கத்தின் நோக்கம் அதனினும் உயர்ந்ததாகும். அது சோசலிசத்தையும், கம்யூனிசத்தையும் இலட்சியமாய்க் கொண்டிருக்கிறது. இந்த இலட்சியத்தை அடைவதற்கான வழி வர்க்கப் போராட்டமே. எனவே முதலாளி வர்க்கம் ஒவ்வொரு தேசிய இயக்கத்தையும் தேசிய அரசையும் முதலாளித்துவ நோக்கங்களுக்கான சாதனங்களாகக் கொள்ளும் அதே வேளையில், பாட்டாளி வர்க்கம் அவற்றை வர்க்கப் போராட்டத்திற்குச் சிறந்த நிலைமைகளை உருவாக்குவது என்ற கண்ணோட்டத்தில் அணுகுகிறது.

“நவீன தேசிய இனம் ஒவ்வொன்றும் இரண்டு தேசிய இனங்களைக் கொண்டிருக்கின்றன” ஒன்று முதலாளி வர்க்க தேசிய இனம்; மற்றொன்று பாட்டாளி வர்க்க தேசிய இனம். முதலாளி வர்க்கம் தனது தேசத்திற்குள் பாட்டாளிகளைச் சுரண்டுவதற்கான முழுப்பாதுகாப்பு, பிற தேசங்களின் மீதான மேலாதிக்கம் சர்வதேசிய ரீதியில் மூலதனத்தின் சுரண்டலும், ஆதிக்கமும் என்பவற்றை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. நிலப்பிரபுக்களும் பிற பிற்போக்காளரும் அதன் கூட்டாளிகளாக இருக்கிறார்கள். ஆனால் பாட்டாளி வர்க்கம் தனது தேசத்தில் மத்திய கால மிச்ச மீதங்களை மட்டுமின்றி முதலாளித்துவச் சுரண்டலையும் ஒழித்து சோசலிசத்தை நிறுவுவதையும் பிற தேசங்களுடன் சமத்துவ உறவுகளைப் பேணுவதையும் சர்வதேச பாட்டாளிகளின் ஒற்றுமையைச் சாதித்து சர்வதேச மூலதனத்துக்கு எதிரான போராட்டத்தின் மூலம் உலகு தழுவிய சோசலிச இலட்சியங்களை அடைவதையும் தனது நோக்கமாகக் கொண்டிருக்கிறது. உழைத்து உழலுகின்ற, சுரண்டப்படுகின்ற மக்கள் அனைவரும் அதனுடன் இருக்கின்றனர். “அவர்களுடைய வாழ்க்கை நிலைமைகள் தவிர்க்க முடியாத வகையில் ஜனநாயகம், சோசலிசம் என்பவற்றின் சித்தாந்தங்களைத் தோற்றுவிக்கின்றன”. இவ்வாறு ஒரே தேசிய இனத்தில் இருக்கும் “முதலாளி வர்க்க தேசியம்” ஏகாதிபத்திய நோக்கங்களையும், ‘பாட்டாளி வர்க்க தேசியம்’ சோசலிச நோக்கங்களையும் கொண்டிருகின்றன.

எனவேதான் லெனின் முதலாளித்துவ தேசியவாத நோக்கங்களுக்கு எதிராக “அனைத்து தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமை, தேசங்களுக்கிடையே சம உரிமை, அனைத்து தேசிய இன பாட்டாளிகளுக்கு இடையிலும் ஐக்கியம், இதுதான் மார்க்சியமும், அகில உலக அனுபவமும், இரசிய அனுபவமும் தொழிலாளர்களுக்குப் போதிக்கும் தேசியத் திட்டம்” என்று பிரகடனப்படுத்தினார்.

இக்கொள்கை தேசிய இனங்களுக்கிடையிலான தேசியப் பூசல்களை அகற்றுவது; ஒவ்வொரு தேசிய இனத்திலும் அதன் பாட்டாளி வர்க்கம் தனது சொந்த நாட்டு மூலதனத்துக்கு எதிராகவும், சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்துடன் ஒன்றிணைந்து சர்வதேச மூலதனத்துக்கு எதிராகவும் தாக்குதல் தொடுப்பது வர்க்கப் போராட்டத்திற்குரிய சாதகமான நிலைமைகளை உருவாக்குவது என்ற நோக்கைக் கொண்டிருக்கிறது என்பது தெளிவு.

எனினும் ஒரு நாட்டின் பாட்டாளி வர்க்கம் தனது சொந்த தேசியத் திட்டத்தை வகுத்துக் கொள்ளும்போது இரண்டு விசயங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் லெனின்.

முதலாவதாக: தேசிய இயக்கங்களைப் பொருத்தவரை ஒன்றுக்கொன்று தீவிரமாக மாறுபடுகின்ற முதலாளித்துவத்தின் இரு காலகட்டங்களைக் கொண்டிருக்கிறது. முதலாவது கட்டம் முதலாளித்துவச் சமுதாயமும் முதலாளித்துவ அரசும் அமைப்பதற்கான முதலாளித்துவ ஜனநாயக - தேசிய இயக்கங்களின் காலகட்டம். அதாவது மத்திய காலத்தை முழுமையாகத் துடைத்தொழித்து முதலாளித்துவ ஜனநாயகத்தை முழுவதுமாக நிறுவுவதற்கான கால கட்டம். இரண்டாவது கட்டம் முதலாளித்துவ அரசு முழுவதுமாய் உருபெற்றுவிட்ட, முதலாளித்துவ வீழ்ச்சித் தருவாய் என்று கூறக்கூடிய, பொதுமக்களின் முதலாளித்துவ ஜனநாயக இயக்கங்கள் பெருகிவிட்ட கால கட்டம். அதாவது முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து பாட்டாளி வர்க்க ஜனநாயகத்திற்கு செல்லும் காலகட்டம். இவ்விரு காலகட்டங்களில் ஒரு நாடு எந்தக் காலகட்டத்தில் இருக்கிறது பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சிக் காலகட்டத்திலா அல்லது அது முடிவுற்றுவிட்ட காலகட்டத்திலா என்பதை பாட்டாளி வர்க்கம் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இதில் எல்லா நாடுகளும் ஒரே மாதிரியாக ஒரே காலகட்டத்தில் இருப்பதில்லை. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சி முற்றுப் பெற்றிருந்தபோது கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், கீழ்த்திசை நாடுகளிலும் அது முற்றுப் பெறாதிருந்ததை லெனின் சுட்டிக்காட்டினார். இத்தகைய நாடுகளில் பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சிக் கட்டத்தைப் புறக்கணித்துவிட்டு பாட்டாளி வர்க்கம் முன்னேறிவிட முடியாது. ஏனெனில் “ஜனநாயகத்தின் மூலமாக அன்றி பாட்டாளி வர்க்கம் வெற்றிபெற முடியாது” அவ்வாறு பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சிக் கட்டத்தை புறக்கணித்துவிட்டு முன்னேற முயன்றால் “நாங்கள் முதலாளி வர்க்க பின்லாந்து தேசம் எதையும் அங்கீகரிக்கப் போவதில்லை - தொழிலாளி வர்க்க பின்லாந்து தேசம் எதையும் அங்கீகரிப்பதைத் தவறு என பிரகடனப்படுத்தினால் - அதைப் போன்ற முட்டாள்தனம் வேறு இருக்க முடியாது. உண்மையில் நிலவுவதை நாம் அங்கீகரிக்க மறுத்தால் அது நம்மை அங்கீகரிக்கும்படி நிர்பந்திக்கும்” என்றும், “தேசிய ஒடுக்குமுறை இருக்கும் ஒரு நிலையில் தேசிய விடுதலைப் பணியைப் புறக்கணிப்பது சோசலிஸ்டுகளின் கண்ணோட்டத்தில் தவறானது” என்றும் லெனின் எச்சரித்தார்.

இரண்டாவதாக: தனது சொந்த நாட்டின் தேசிய இனங்களின் வளர்ச்சி வேகம், தேசிய இன அமைப்பு, மக்கள்தொகை பங்கீடு போன்ற பல்வேறு பிரச்சினைகளிலும் அவற்றின் சிறப்புக்கூறுகளையும், பிற நாடுகளிலிருந்து அவை வேறுபட்டிருக்கும் முறைகளையும் பருண்மையாக வேறுபடுத்திக் காண வேண்டும்.

இவ்விரண்டு விசயங்களையும் பருண்மையாக ஆய்வுசெய்து கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் “பொதுவான வரலாற்று ரீதியிலான நிலைமைகளையும் அரசு நிலைமைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எந்த நாட்டைச் சேர்ந்த மார்க்சியவாதிகளும் தமது தேசியத் திட்டத்தை வகுக்கும் பேச்சுக்கே இடமில்லை”.

மேலும் தேசிய இயக்கம் என்பது சார்பற்ற ஒரு முழுமையல்ல. தொழிலாளி வர்க்கத்தின் வெற்றி மட்டுமே எல்லா வறிய தேசிய இனங்களுக்கும் முழுமையான விடுதலையைத் தரமுடியும். இந்நிலையில் ஒடுக்கும் தேசிய இனப் பாட்டாளி வர்க்க விடுதலை இயக்கங்களுக்கும், ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் பூர்சுவா விடுதலை இயக்கங்களுக்கும் இடையிலான உறவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆனால் “இதில் என்னென்னவிதமான உறவுகள் சாத்தியம் என்பதை முன்கூட்டியே மதிப்பிட்டுக் கூறமுடியாது” அது பருண்மையான நிலைமைகளால் மட்டுமே மதிப்பிடக்கூடியதாகும். எனவே ஒரு நாட்டின் மார்க்சியவாதிகளின் தேசியத்திட்டம் இவ்வுறவுகள் குறித்த பருண்மையான ஆய்வுகளின் அடிப்படையிலும் அமைந்திருப்பது அவசியமாகும்.

இது ஏகாதிபத்திய சகாப்தம், “ஒரு சில மாபெரும் வல்லரசுகள்” உலகம் முழுவதும் உள்ள தேசங்களை ஒடுக்குவது தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற சகாப்தமே ஏகாதிபத்தியம் என்றும் “மற்ற தேசிய இனங்களை ஒடுக்குகின்ற தேசிய இனங்கள் இந்த ஒடுக்குமுறையை விரிவுபடுத்தவும் பெருக்கவும் காலனிகளை மறுபடியும் தமக்கிடையே மறுபங்கீடு செய்து கொள்ளவும் செய்கின்ற முயற்சிகள் ஏகாதிபத்தியம்” என்றும் கூறினார் லெனின். எனவே எந்த ஒரு தேசிய இயக்கத்தையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. இது பாட்டாளி வர்க்கம் தனது “சோசலிசத்திற்கான புரட்சிகரப் போராட்டத்தை தேசியப் பிரச்சினைப் பற்றிய ஒரு புரட்சிகரத் திட்டத்துடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும்” என்பதை வலியுறுத்துகிறது.

சுயநிர்ணய உரிமையும், தேசிய விடுதலையும் 
(வரலாற்றுச் சான்றுகளிலிருந்து)

சுயநிர்ணய உரிமை என்பது ஒவ்வொரு தேசிய இனமும் தனித்து தேசிய அரசு அமைத்துக் கொள்வதற்கான உரிமையாகும். சுயநிர்ணயம் என்பது தனித்து தேசிய அரசு அமைத்துக் கொள்வது அல்லது அந்த உரிமையுடன் பிற தேசிய இனங்களுடன் சேர்ந்து ஒரு அரசின் கீழ் வாழ்வது என்பதாகும். தேசிய விடுதலை என்பது ஒடுக்கும் தேசிய இனத்திடமிருந்து அல்லது ஏகாதிபத்தியத்தின் காலனியத் தளையிலிருந்து பிரிந்து தனி தேசிய அரசை நிறுவிக் கொள்வதாகும்.

பாட்டாளி வர்க்கம் பூர்ஷ்வா தேசிய அரசின் வரலாற்றுப் பாத்திரத்தை அங்கீகரிக்கும் அதே வேளையில் “தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்ற எதிர்மறைக் கோரிக்கையுடன் மட்டும் தன்னை நிறுத்திக் கொள்கிறது” என்றார் லெனின். ஒடுக்கும், ஒடுக்கப்படும் தேசிய இனங்களை உள்ளடக்கிய ஒரு பல்தேசிய அரசு சமூகத்தில் ஒடுக்கும் தேசிய இனத்திற்கு மட்டுமேயுரிய தனிச்சலுகையாகவே சுயநிர்ணய உரிமை இருக்கிறது. இரசியாவில் பெரிய இரசிய தேசிய இனத்திற்கு மட்டுமே இச்சலுகை இருந்ததை லெனின் சுட்டிக்காட்டினார். எனவே இங்கு அங்கீகரிக்கப்பட வேண்டியிருப்பது ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் ஒவ்வொரு தேசிய கோரிக்கை விசயத்திலும், தேசிய விடுதலை - பிரிவினை கோரிக்கை விசயத்திலும் ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற நிலையை பாட்டாளி வர்க்கம் மேற்கொள்ளக்கூடாது என்பது அல்ல. மாறாக பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்ட நலன் என்ற கண்ணோட்டத்தில் அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிக்கும் அதே நேரத்தில் குறிப்பான ஒவ்வொரு தேசியக் கோரிக்கை - பிரிவினை - விடுதலை விசயத்திலும் ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற உறுதியான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பதேயாகும். எனவேதான் பாட்டாளி வர்க்கம் “எந்த ஒரு தேசிய கோரிக்கையையும் ஒவ்வொரு தேசியப் பிரிவினையையும் தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டம் என்ற கோணத்திலேயே மதிப்பிடுகிறது” என்றும் “எல்லா தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகிற உரிமை அளிப்பது’ பிரிந்து போகிற பிரச்சினை எழுகிறபோது எல்லா ஏற்ற தாழ்வுகளையும் எல்லா தனித்துவப் போக்குகளையும் நீக்கும் நோக்கத்துடன் அதை அணுகி சீர்தூக்கிப் பார்ப்பது - கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்ததும்; செயல்பூர்வமானதும்; ஜனநாயகம், சுதந்திரம், பாட்டாளி வர்க்க ஐக்கியம் - ஆகியவற்றை உண்மையில் பேணுகிறதுமான கொள்கை இதுதான்” என்றும் கூறினார் லெனின்.

ஆனால் இது எந்தக் காரணத்தாலும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கே மறுப்பாக முடியாது. ஏனெனில் அது தேசிய ஒடுக்குமுறைக்கும், தேசிய சமத்துவமின்மைக்கும், அதன் காரணமாக ஒடுக்கும், ஒடுக்கப்படும் தேசிய இனங்களைச் சேர்ந்த பாட்டாளிகளிடையேயான தேசியக் கசப்புணர்வுகளுக்கும் ஒற்றுமை இன்மைக்கும் அதன் காரணமாக வர்க்கப் போராட்டத்தை பின்னுக்குத் தள்ளி தேசியப் பூசல்களை முதன்மைப் படுத்துவதற்கும், இதன் மூலம் சோசலிச இலட்சியங்களைப் பின்னுக்குத் தள்ளுவதற்கும் ஆதரவளிப்பதாகவே இருக்கும். “சுயநிர்ணய உரிமையை அல்லது பிரிந்து போகும் உரிமையை மறுப்பதானது மேலோங்கி ஆட்சிபுரியும் தேசிய இனத்தின் விசேச உரிமைகளை நடைமுறையில் ஆதரிப்பதாகவே முடியும்” என்றார் லெனின். எனவே பாட்டாளி வர்க்கம் எக்காரணம் கொண்டும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கு எதிராக இருக்க முடியாது.

இக்காரணத்தாலேயே இரசியாவில் ரோசாலுக்சம்பர்க் போலந்து தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கு எதிர்ப்பு தெரிவித்தபோது அதை கடுமையாகச் சாடினார் லெனின். “போலந்தின் தேசியவாத பூர்ஷ்வாக்களுக்கும் ‘உதவிடக்கூடாதே’ என்ற கவலையில் ரோசாலுக்சம்பர்க் இரசிய மார்க்சியவாதிகளின் செயல்திட்டத்தில் காணப்படும் பிரிந்து போகும் உரிமையை நிராகரிக்கிறார். அப்படிச் செய்கையில் பெரிய இரசிய கறுப்பு நூற்றவர்க்கு அவர் உண்மையில் உதவுகிறார்” என்றும் “போலந்தில் தேசியவாதத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தின் ஆர்வத்தால் உந்தப்பட்டு ரோசா லுக்சம்பர்க் பெரிய - இரசியர்களின் தேசியவாதத்தை மறந்துவிட்டார்” என்றும் கூறினார்.

அதே நேரத்தில் போலந்து - சோசலிஸ்டுக் கட்சியினரின் தேசிய விடுதலை என்ற கோரிக்கையையும் அவர் ஆதரிக்கவில்லை. அது “பூர்ஷ்வா தேசியவாதம்” என்றும் “குட்டி பூர்ஷ்வா தீவிர தேசியவாதம்” என்றும் அவர் சாடினார். 1840-1870களில் மார்க்ஸ் (இரசியாவிலிருந்து) போலந்து பிரிவினையையும் (பிரிட்டனிலிருந்து) அயர்லாந்து பிரிவினையையும் ஆதரித்ததை மேற்கோள்காட்டி போலந்து பிரிவினையை வலியுறுத்தியவர்களுக்கு மார்க்ஸ் அயர்லாந்து பிரிவினையை ஆதரித்ததற்கும், போல்ஷ்விக் கட்சி போலந்து பிரிவினையை ஆதரிக்காததற்கும் கொள்கை அடிப்படை ஒன்றே என்பதை நிறுவினார்.

இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிவது “சாத்தியமற்றது” என்று முதலில் கருதிய மார்க்ஸ் அது “தவிர்க்க முடியாதது” என்று பின்னர் வலியுறுத்தினார். ஆங்கிலேயத் தொழிலாளி வர்க்கத்தின் கை ஓங்கி அது புரட்சியை முன் நடத்துமானால் அயர்லாந்து விடுதலை சாத்தியம் என முதலில் அவர் கருதினார். ஆனால் ஆங்கிலேயப் பாட்டாளி வர்க்கம் கணிசமான காலம் மிதவாதிகளுடைய செல்வாக்கின் கீழிருந்து அவர்களுக்கு வால்பிடித்து அவர்களுடைய கொள்கையையே கடைப் பிடித்ததன் மூலம் புரட்சிகரத் தலைமையற்று நின்றுவிட்டது. அதே நேரத்தில் அயர்லாந்து பூர்ஷ்வா விடுதலை இயக்கம் வலுப்பெற்று புரட்சிகர வடிவங்களை எடுத்தது. அப்போது அயர்லாந்து விடுதலையை ஆதரித்த மார்க்ஸ் “அயர்லாந்தை இங்கிலாந்து அடிமைப்படுத்தியதால் இங்கிலாந்தில் பிற்போக்கு வலுப்பெற்று ஊட்டம் பெற்றுவிட்டது” என்றும் “அயர்லாந்து இங்கிலாந்தின் தளையிலிருந்து விடுபடும்வரை ஆங்கிலேயத் தொழிலாளி வர்க்கம் சுதந்திரம் பெற்றிருக்க முடியாது” என்றும், “அயர்லாந்தை விட்டுத் தொலைக்கும்வரை ஆங்கிலேயத் தொழிலாளி வர்க்கம் எதையும் சாதிக்க முடியாது. இங்கிலாந்தில் ஆங்கிலேயப் பிற்போக்குவாதத்துக்கு மூல காரணம் அயர்லாந்தை அடிமைப் படுத்தியதுதான்” என்றும் கூறினார்.

ஆங்கிலேயத் தொழிலாளி வர்க்கம் பிற்போக்கில் ஊட்டம் பெற்றிருந்தபோது அயர்லாந்து பூர்ஷ்வா விடுதலை இயக்கம் புரட்சிகர வடிவங்களை எடுத்திருந்தது. இந்த நிலையில்தான் மார்க்ஸ் அயர்லாந்து விடுதலையை ஆதரித்தார். “அயர்லாந்து, பிரிட்டிஷ் தொழிலாளர்கள் மார்க்சின் கொள்கையை ஏற்று அயர்லாந்து விடுதலையை தமது முழக்கமாக ஏற்றுக் கொள்ளாமல் இருந்திருந்தால் அது படுமோசமான சந்தர்ப்பவாதமாக இருந்திருக்கும். ஜனநாயகவாதிகள், சோசலிஸ்டுகள் என்ற முறையில் தங்கள் கடமைகளைக் கைவிட்டதாக இருந்திருக்கும் ஆங்கிலேயப் பிற்போக்குக்கும், ஆங்கிலேயப் பூர்ஷ்வாக்களுக்கும் விட்டுக் கொடுப்பதாக இருந்திருக்கும்” என்றார் லெனின்.

1840-1860களில் இரசியாவிலும் பெரும்பாலான ஸ்லாவிய நாடுகளிலும் பொதுமக்கள் உணர்ச்சியற்ற உறக்க நிலையில் இருந்தபோது, அங்கு சுயேச்சையான பொதுமக்களின் ஜனநாயக இயக்கங்கள் இல்லாதபோது, போலந்தில் நடைபெற்ற சிறு நிலப்பிரபுக்களின் விடுதலை இயக்கம் இரசிய ஜனநாயகத்தின் கண்ணோட்டத்திலிருந்து மட்டுமின்றி, ஸ்லாவிய மற்றும் ஐரோப்பிய ஜனநாயகத்தின் கண்ணோட்டத்திலிருந்தும் பிரதானமான, பிரமாண்டமான முக்கியத்துவத்தைப் பெற்றதாய் இருந்தது. “அப்போது போலந்து முழுவதுமே - விவசாயிகள் மட்டுமல்ல மேன்மக்களின் பெரும்பகுதியினரும் கூட - புரட்சிகரமாக இருந்தது. தேசிய விடுதலைப் போராட்டத்தின் மரபுகள் மிகவும் பலமானவையாக, ஆழமாக வேரூன்றியவையாக இருந்தன”. இந்த நிலைமையில்தான் மார்க்ஸ் போலந்தின் விடுதலையை ஆதரித்தார்.

ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலைமை வேறுமாதிரியாகிவிட்டது. “பீட்டர்ஸ்பர்க், வார்சாவைக் காட்டிலும் மிக அதிகமான அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த புரட்சிகரமான மையமாகிவிட்டது. இரசியாவின் புரட்சிகர இயக்கம் போலந்து இயக்கத்தைக் காட்டிலும் மாபெரும் சர்வதேச முக்கியத்துவத்தை அடைந்துவிட்டது”.

இந்த நிலையில்தான் போலந்து தொழிலாளர்களுக்கு தேசியப் பிரச்சினை இரண்டாம்தர முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறிய போலந்து சமூக ஜனநாயகக் கட்சி இரசிய தொழிலாளர்களுடனான நெருங்கிய வர்க்கப் போராட்ட ஒற்றுமையை வற்புறுத்தியது. லெனின் போலந்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் தீர்மானத்தை வலியுறுத்திய அதே வேளையில் அது பிரிந்து செல்வது பற்றிய கோரிக்கையை ஆதரிக்கவில்லை.

எனினும் “போலந்தின் உள்நாட்டு, வெளிநாட்டு நிலைமைகளில் மாறுதல் ஏற்பட்டு மீண்டும் அது தனியாகப் பிரிந்து போவதுதான் சரியானது என்கிற நிலை வராது என்று கூறமுடியாது” என்பதையும் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

1905ல் ஸ்வீடனில் புரட்சிகர எழுச்சி எதுவும் இல்லாத நிலையில் நார்வே தானாகவே தீர்மானித்து ஸ்வீடனிலிருந்து பிரிந்தது. தொடர்ந்து நார்வேயின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்து வந்த ஸ்வீடன் பாட்டாளி வர்க்கம் இந்தப் பிரிவினையை அங்கீகரித்தது. நார்வே மீது படையெடுக்க வேண்டும் என்று ஸ்வீடன் நிலப்பிரபுக்கள் கூறியபோது அதை ஸ்வீடன் தொழிலாளி வர்க்கம் எதிர்த்தது. ஸ்வீடனிலிருந்து நார்வே பிரிந்ததை லெனினும் ஆதரித்தார். “ஐரோப்பிய மன்னர்களாலும், ஸ்வீடன் உயர் குடியினராலும் நார்வே மீது திணிக்கப்பட்ட உறவுகள் கலைந்ததால், நார்வே - ஸ்வீடன் தொழிலாளிகளின் உறவுகள் வலுவடைந்தன” என்றார் லெனின்.

மேலும் நார்வே பிரிவினையின்போது நார்வே தேசிய இன மக்களில் பெரும்பான்மையினர் முடியாட்சியையே விரும்பினர். ஆனால் பாட்டாளி வர்க்கம் குடியரசை விரும்பியது. எனவே “நிலைமை சாதகமாக இருந்தால் புரட்சி அல்லது பெரும்பான்மையின் விருப்பத்துக்கு இணங்கி நின்று தொடர்ந்து பிரச்சாரமும் கிளர்ச்சியும் என்பதுதான் நார்வே பாட்டாளி வர்க்கத்தின் நிலை” என்பதையும் லெனின் விளக்கினார்.

அயர்லாந்து, போலந்து, நார்வே ஆகிய மூன்றின் உதாரணங்கள் காட்டுவது என்ன?

முதலாவதாக: ஒடுக்கும் தேசிய இனத்தின் ஜனநாயக இயக்கங்களோ பாட்டாளி வர்க்க இயக்கங்களோ இன்றி அது பிற்போக்கில் மூழ்கி இருக்கும்போது ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் தேசிய விடுதலைப் போராட்டத்தை உறுதியாக தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்பதை அயர்லாந்து போலந்து பிரச்சினைகளில் மார்க்சின் அணுகுமுறை தெளிவுபடுத்துகிறது.

இரண்டாவதாக: ஒடுக்கும் தேசிய இனத்தில் ஜனநாயக இயக்கங்களும், பாட்டாளி வர்க்க இயக்கங்களும் ஒடுக்கப்படும் தேசிய இனத்தைவிட முன்னணியில் இருக்கும்போது ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அவை அங்கீகரிப்பதுடன் இரு தேசிய இன பாட்டாளி வர்க்கமும் ஒன்றுபட்டு போராட வேண்டும்; ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் பிரிவினைக் கோரிக்கையை ஆதரிக்கக்கூடாது என்பதை போலந்து விவகாரத்தில் போல்ஷ்விக் கட்சியின் அணுகுமுறை உணர்த்துகிறது.

மூன்றாவதாக: ஒடுக்கும் தேசிய இனத்தில் பாட்டாளி வர்க்க இயக்கம் இருந்து அதைவிட ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் தேசிய விடுதலை இயக்கம் முன்னணியில் இருக்குமாயின் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதுடன் பிரிவினையையும் அங்கீகரிக்க வேண்டும். அதே நேரத்தில் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கம் சாத்தியமானால் ஒரு புரட்சிக்குத் தயாராய் இருக்க வேண்டும் என்பதை ஸ்வீடன், நார்வே கட்சிகளின் அணுகுமுறையும் லெனின் அணுகுமுறையும் உணர்த்துகின்றன.

தொகுப்பாகக் கூறின் இம்மூன்று உதாரணங்களும் உணர்த்தும் உண்மை என்னவெனில் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்க தேசியத்திட்டம் தேசிய விடுதலையை முன்வைப்பதா அல்லது சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்துடன் ஒன்றிணைந்து வர்க்கப் போராட்டத்தை முன்வைப்பதா என்பது முற்றிலும் ஒடுக்கும் தேசிய இனப்பாட்டாளி வர்க்கத்தின் பலம் மற்றும் நடத்தையை பொருத்தே தீர்மானிக்கப்படுகிறது என்பதேயாகும்.

எனினும் இன்னொருவகைப்பட்ட தேசிய விடுதலைக் கோரிக்கையையும் பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க முடியாது. போலந்து, அயர்லாந்து விடுதலையை ஆதரித்தது போலவே மார்க்ஸ் 1840-1850ம் ஆண்டுகளில் ஹங்கேரியர்களின் விடுதலை இயக்கத்தையும் ஆதரித்தார். அதே சமயத்தில் செக் மக்கள், தெற்கு ஸ்லாவ் மக்கள் என்கிற இரு தேசிய இனங்களின் விடுதலை இயக்கங்களையும் எதிர்த்தார். ஏனெனில் செக்குகளும், தெற்கு ஸ்லாவியர்களும் பிற்போக்கு தேசிய இனங்களாக இருந்தனர். ஐரோப்பாவில் இரசியா எதேச்சதிகார ஆட்சிக்கு உதவி செய்யும் ‘காவல் நிலையங்களாக’ இருந்தனர். ஹங்கேரியங்களும் போலந்துக்காரர்களும் எதேச்சதிகார ஆட்சியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தபோது செக்குகளும், தெற்கு ஸ்லாவியர்களும் ஜாரியத்திற்கு ஆதரவாக இருந்தனர். ஜாரியம் ஐரோப்பியப் புரட்சி இயக்கத்திற்கே விரோதியாக இருந்ததால் அதற்கு ஆதரவளித்த செக், தெற்கு ஸ்லாவ் தேசிய இனங்களின் தேசிய விடுதலையினை மார்க்ஸ் ஆதரிக்கவில்லை.

ஸ்வீடன் - நார்வே பிரச்சினையில் நார்வேயின் சுயநிர்ணய உரிமையை ஸ்வீடன் தொழிலாளர்கள் ஆதரிப்பது அவர்களுடைய கடமையாக இருந்தது (அப்படி நிபந்தனை அற்ற முறையில் ஆதரிக்காத ஸ்வீடன் தொழிலாளி ஒரு சமூக ஜனநாயகவாதியாக இருக்கமுடியாது என்றார் லெனின்) என்பதைச் சுட்டிக்காட்டிய லெனின் அதே நேரத்தில் பிரிவினையை ஆதரிப்பது நார்வே தொழிலாளர்களுக்கு ஒரு கடமையாக இருக்கவில்லை என்பதையும் சில சமயங்களில் (பிரிவினையால் பிரிட்டிஷ் - ஜெர்மன் யுத்த சாத்தியப்பாடு நிச்சயம், அல்லது சாத்தியம் என்ற நிலை ஏற்படுமானால்) பிரிவினையை எதிர்க்கவும் செய்யலாம். அதுவே அவர்கள் தமது சர்வதேசக் கடமையினை அப்போது நிறைவேற்றுவதாக அமையும் என்று எடுத்துரைத்தார். 

மார்க்ஸ், செக், தெற்கு ஸ்லாவ் விடுதலையை எதிர்த்ததற்கும், நார்வே தொழிலாளர்கள் தமது தேசிய இனப் பிரிவினையை எதிர்ப்பதற்கு வாய்ப்புள்ள காரணம் என லெனின் கூறுவதற்கும் அடிப்படை ஒன்றே; அதாவது ஒரு தேசிய இனத்தின் விடுதலை, ஒட்டுமொத்த சர்வதேசப் புரட்சி இயக்கத்தின் நலன்களின் ஒரு பகுதியாகப் பார்க்கப்பட வேண்டும். சர்வதேசப் புரட்சியின் நலனுக்கு விரோதமாக சர்வதேச எதிரிகளுக்கு ஆதரவாக விளங்குமாயின் அல்லது உலக அரங்கில் மிகப் பெரிய யுத்தங்களுக்கும் அழிவுகளுக்கும் அது காரணமாய் விளங்குமாயின் அத்தகைய தேசிய விடுதலைக் கோரிக்கைகள் எதிர்க்கப்பட வேண்டும், ஆதரிக்கப்படக்கூடாது என்பதே அது. ஐரோப்பாவின் ஒட்டுமொத்தப் புரட்சி நலனுக்கு விரோதமாக இருந்ததால் செக், தெற்கு ஸ்லாவ் தேசிய விடுதலைக் கோரிக்கையை மார்க்ஸ் எதிர்த்தார்; ஜெர்மனி, பிரிட்டிஷ் இடையிலான அழிவு யுத்த சாத்தியப்பாட்டிற்கு காரணமாக அமைந்துவிடுமெனில் நார்வே பிரிவினையை தொழிலாளர்கள் எதிர்ப்பார்கள் என்றார் லெனின்.

தேசியப் பிரச்சினையில் பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையும் 
வர்க்கப் போராட்ட நலன்களும்

அனைத்து தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமை, தேசங்களுக்கிடையே சமத்துவம், அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களிடையே ஒற்றுமை என்ற “பாட்டாளி வர்க்கத்தின் இக்கொள்கையின் அடிப்படையிலேயே ஒவ்வொரு தேசியக் கோரிக்கையையும் பிரிவினைக் கோரிக்கையையும் தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டம் என்ற கோணத்தில் மதிப்பீடு செய்து அனைத்து தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை அங்கீகரிப்பதுடன் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் பிரிவினைக் கோரிக்கையை - தேசிய விடுதலைக் கோரிக்கையை - ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்ற நிலைப்பாட்டையும் மார்க்சிஸ்டுகள் மேற்கொள்கிறார்கள்”.

அனைத்து தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமை, தேசங்களுக்கிடையே சமத்துவம் என்ற கொள்கையை ஏற்றுக் கொள்வதும், அத்துடன் குறிப்பான பிரச்சினைகளில் தேசிய விடுதலையை - பிரிவினையை - ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்ற நிலைப்பாட்டை மேற்கொள்வதும் எவ்வகையில் பாட்டாளிவர்க்க ஒற்றுமைக்கும் வர்க்கப் போராட்ட நலன்களுக்கும் உகந்ததாக அமைகிறது?

சுயநிர்ணய உரிமையையும், சமத்துவத்தையும் மறுப்பது தேசிய ஒடுக்குமுறையே. இது இரு தேசிய இனங்களுக்கிடையே ஒடுக்கும் தேசிய இனம் - ஒடுக்கப்படும் தேசிய இனம், சலுகை பெற்ற தேசிய இனம் - உரிமை மறுக்கப்பட்ட தேசிய இனம் என்ற பிளவையும் ஏற்படுத்துகிறது. இது இரு தேசிய இனப் பாட்டாளி வர்க்கத்திடையேயான பிளவுக்குக் காரணமாகிறது என்பதுடன் தேசியப் பூசல்களுக்கும் காரணமாகிறது. தேசியப் பூசல்கள் ஒவ்வொரு தேசிய இனத்திலும் மூலதனத்துக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தைப் பின்னுக்குத் தள்ளுவதுடன் மூலதனத்துக்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமையையும் சிதறடிக்கிறது. இதற்கு மாறாக சுயநிர்ணய உரிமையையும் சமத்துவத்தையும் அங்கீகரிப்பது (இதை அங்கீகரிக்க வேண்டியவர்கள் முதன்மையாக ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த பாட்டாளிகள்தாம்) ஒடுக்கப்படும் தேசிய இனப்பாட்டாளிகளுக்கு ஒடுக்கும் தேசிய இனப் பாட்டாளிகள் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் என்பதுடன் அது தேசியப் பூசல்களை இரண்டாம் பட்ச நிலைக்குத் தள்ளிவிடும். ஒவ்வொரு தேசிய இனப் பாட்டாளி வர்க்கமும் தனது சொந்த மூலதனத்தை எதிர்த்துப் போராடுவதையும் சர்வதேசிய மூலதனத்துக்கு எதிராக ஒன்றுபடுவதையும் இது சாத்தியமாக்கும். இவ்வாறு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் தேசங்களிடையிலான சமத்துவத்தையும் அங்கீகரிப்பது வர்க்கப் போராட்டத்துக்கும் வர்க்க ஒற்றுமைக்கும் அவசியமான நிபந்தனைகளாகின்றன. எனவேதான் “பாட்டாளிகளின் ஐக்கியம் பற்றிய நலன்களும், அவர்களது வர்க்க ஒற்றுமையின் நலன்களும் தேசிய இனங்களின் பிரியும் உரிமையை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் எனக் கோருகின்றன” என்று பிளக்கானவ் எழுதியதை ஆதரித்து எழுதினார் லெனின்.

எனினும் ஒடுக்கப்படும் தேசிய இனம் பிரிவினைக் கோரிக்கையை, விடுதலைக் கோரிக்கையை எழுப்பும் குறிப்பான காலங்களில் ஒடுக்கும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கம் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் தேசிய சமத்துவத்தையும் அங்கீகரிப்பதாகக் கூறுவது மட்டும் பாட்டாளி வர்க்க ஒற்றுமைக்கும், வர்க்கப் போராட்ட நலன்களுக்கும் போதுமானதல்ல. அவற்றை அங்கீகரிப்பதுடன் கூடவே தேசிய விடுதலைக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற குறிப்பான நிலைப்பாட்டையும் மேற்கொள்ள வேண்டும். ஒடுக்கும் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கம் ஆதரவு - சாத்தியமானால் தலைமை ஏற்பது - அல்லது எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். இம்முடிவுகள் ஒவ்வொரு பிரச்சினையிலும் பருண்மையான நிலைமைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பருண்மையான முடிவுகளாகும். இவ்வாறு மேற்கொள்வதன் மூலம் மட்டுமே பாட்டாளிவர்க்க ஒருமைப்பாடும், வர்க்கப் போராட்ட நலன்களும் பாதுகாக்கப்படுகின்றன.

தேசிய இனங்களின் சுயநிர்ணயம் சம்பந்தமாக மூன்றுவித நாடுகளைக் குறிப்பிட்ட லெனின் அவற்றில் ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசியக் கடமையை - பாட்டாளிவர்க்க ஒற்றுமை, வர்க்கப் போராட்ட நலன் என்பதற்கு அதுவே முதல் நிபந்தனை - தெளிவுபடுத்தினார். பூர்ஷ்வா முற்போக்கு தேசிய இயக்கங்கள் வெகு நாட்களுக்கு முன்பே முடிந்து, பின்பு ஏகாதிபத்தியங்களாக மாறிவிட்ட மேற்கு ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கம் அவற்றால் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் காலனி நாடுகளின் உடனடிச் சுதந்திரத்திற்காக போராட வேண்டும் என்றார். பூர்ஷ்வா தேசிய இயக்கங்கள் முடிவடையாத - நிகழ்காலத்திற்குரியதாக உள்ள ஒடுக்கும், ஒடுக்கப்படும் தேசிய இனங்களைக் கொண்ட பல தேசிய அரசு சமூகங்களில் உள்ள ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கம், ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவதுடன் ஐக்கியப்படவும் வேண்டும் என்றார். பூர்சுவா தேசிய இயக்கங்கள் தொடக்க நிலையில் உள்ள காலனி, அரைக்காலனி நாடுகளில் உள்ள தேசிய விடுதலை இயக்கங்களுக்கு - புரட்சிகர சக்திகளுக்கு ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள பாட்டாளி வர்க்கம் உறுதியான ஆதரவு தர வேண்டும் என்றார்.

பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தைப் பாதுகாப்பதில் ஒடுக்கும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளையே லெனின் எப்போதும் முதன்மையாக வலியுறுத்தி வந்தார். “ஒடுக்கும் நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களை சர்வதேசிய உணர்வில் பயிற்றும்போது ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு பிரிந்துபோகும் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்பதை ஆதரித்து அதற்காகப் போராட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். இது இல்லாவிட்டால் சர்வதேசியம் என்பது இருக்க முடியாது. ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த சமூக ஜனநாயகவாதிகள் அத்தகையப் பிரச்சாரத்தை செய்யத் தவறினால் அவ்வாறு தவறிய ஒவ்வொருவரையும் ஏகாதிபத்தியவாதி என்றும், கயவர் என்றும் கருதுவது நமது உரிமையும் கடமையும் ஆகும்” என்றும் “சுயநிர்ணய உரிமைப் பிரச்சினை ஒடுக்கும் தேசியங்களைச் சேர்ந்த சோசலிஸ்டுகளின் நடத்தையை ஆதாரமாக கொண்டு திகழ்கிறது” என்றும் அவர் கூறினார்.

ஆனால் ஒடுக்கும் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கம் பிற்போக்கில் ஊட்டம் பெற்றிருக்கும்போது ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் விடுதலையை ஆதரிக்க வேண்டும் என்பதற்கு மார்க்ஸ் அயர்லாந்து விடுதலையை ஆதரித்தது உதாரணமாகும். இந்த விடுதலையினால் ஒடுக்கும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கத்தின் பிற்போக்கு ஊட்டம் வற்றி அது ‘ஏதும் செய்ய முடியாது’ என்ற நிலைக்கு முடிவு கட்டப்படும் என்று மார்க்ஸ் கருதினார். மேலும் இத்தேசிய விடுதலையினால் ஒடுக்கும் தேசிய இனத்திலும் தேசியப் பிரச்சினை இரண்டாம்பட்சமாகி வர்க்கப் போராட்டம் முதன்மையானதாகும். இவ்வாறு இவ்விசயத்தில் வர்க்கப் போராட்டமும் அதனால் வர்க்க ஒற்றுமையும் (ஒடுக்கும் தேசிய இனத்தின் பிற்போக்கு ஊட்டம் வற்றும்போது அது ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கத்துடன் வர்க்கப் போராட்டத்தில் ஒன்றுபடுவதும் சாத்தியமாகும்) பயன்பெறுகிறது.

மற்றொரு உதாரணமாக ஒடுக்கும் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கம் பலவீனமாக இருக்கும்போது தனது சொந்த ஆளும் வர்க்கத்தை தூக்கி எறியும் போராட்டத்தில் உடனடியாகத் தலைமை ஏற்காத நிலையில் இருக்கும்போது (உதாரணம் ஸ்வீடன் பாட்டாளி வர்க்கம்) அது ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதுடன் அது பிரிந்து போகும்போது முழு ஆதரவும் தருவது (ஸ்வீடனிலிருந்து நார்வே பிரிந்து சென்றபோது அதை ஸ்வீடன் பாட்டாளி வர்க்கம் அங்கீகரித்தது) பாட்டாளி வர்க்க ஒற்றுமையைப் பிளவுபடுத்துவதாகும் என்று வாதாடியவர்களுக்கு எதிராக “ நார்வே, ஸ்வீடன் மக்களின் பொது நலன்களும் அவர்களின் நெருங்கிய உறவும்தான் ஸ்வீடனிலிருந்து நார்வே பிரிந்ததால் பயன்பெற்றன” என்றும் “ஸ்வீடன், நார்வே ஆகிய இரு பூர்ஷ்வாக்களுக்கு எதிரான போராட்டத்தில் இரு தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களின் சம அந்தஸ்தையும், வர்க்க ஒருமைப்பாட்டையும் தங்களால் பேணிப் பாதுகாக்க முடியும் என்பதை ஸ்வீடன் தொழிலாளர்கள் நிரூபித்துவிட்டார்கள்” என்றும் லெனின் கூறினார். ஸ்வீடனிலிருந்து நார்வே பிரிந்ததன் மூலம் தேசிய பூசல் பின்னுக்குத் தள்ளப்பட்டு தமது சொந்த முதலாளி வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தை இரு தேசிய இன பாட்டாளி வர்க்கமும் முதன்மைப் படுத்த முடிந்ததையே இங்கு லெனின் குறிப்பிடுகிறார். இதன் மூலம் பாட்டாளி வர்க்க ஒருமைப்பாடும் வர்க்கப் போராட்ட நலனும் இலாபம் அடைந்தது.

அடுத்து ஒடுக்கும் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கம் பலமானதாக இருந்து அது ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமானால் அதன் மூலம் ஒடுக்கப்படும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்துடன் அது ஐக்கியப்பட முடியும். இத்தகைய நிலைமைகளில் ஒடுக்கப்படும் தேசிய இனத்திலிருந்து பிரிவினைக் கோரிக்கை எழுமானால் அது பிற்போக்கானது; தமது சொந்த பூர்ஷ்வா தேசியவாத நலன்களைக் காப்பதை நோக்கமாகக் கொண்டது என்பது மட்டுமின்றி ஒன்றுசேர்ந்து பொது எதிரியை - ஒடுக்கும் தேசிய இன ஆளும் வர்க்கத்தை - எதிர்த்துப் போராடி வீழ்த்துவதற்கான வாய்ப்பை நிராகரிப்பதன் மூலம் தனது சொந்த பூர்ஷ்வா தேசியவாத நலன்களுக்கு மறைமுகமாக துணை செய்வதும் ஆகும். எனவேதான் இரசிய பெருந்தேசிய இனத்தில் பாட்டாளி வர்க்க இயக்கம் பலமாகவும் அனைத்து ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகப் போராடுவதாகவும் கட்சியின் முக்கிய சக்தியாகவும் இருந்தபோது அதனுடன் ஒன்றுபட்டு போராடுவதற்கு பதிலாக - போலந்தில் ஒரு பிரிவினர் பிரிந்துபோக வேண்டும் என கோரியதை லெனின் எதிர்த்தார். இத்தகைய நிலைமைகளில் ஒடுக்கும் - ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் பாட்டாளிகளுக்கிடையேயான ஒற்றுமையை நிராகரித்து ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் பிரிவினையைக் கோருவது தேசியப் பூசல்களை இரண்டாம்பட்ச நிலைக்குத் தள்ளுவதற்கான வாய்ப்பை நிராகரித்து வர்க்க போராட்ட நலன்களுக்கும் வர்க்க ஒற்றுமை நலன்களுக்கும் ஊறு செய்வதாகும். இத்தகைய நிலைமைகளில் அதாவது ஒடுக்கும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கம் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை - பிரிந்து போகும் உரிமையை அங்கீகரித்து பிரச்சாரம் செய்யும்போது ஒடுக்கப்படும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கம் அதை ஏற்று “ஐக்கியப்படும் உரிமைக்காக” தனது தேசிய இனத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டும். இவ்வாறு “தேசிய குறுகிய மனப்பான்மை, தனித்திருத்தல், ஒதுங்கி வாழ்தல் ஆகியவற்றுக்கு எதிராகப் போராட வேண்டும்” என்றார் லெனின்.

அதே போல் ஒரு தேசிய இனத்தின் விடுதலைக் கோரிக்கை உலகப் புரட்சியின் எதிரிக்கும் பிற்போக்குவாத சக்திகளுக்கும் சாதகமாக அமையுமெனில், அத்தகைய நிலைமைகளில் பேரழிவு கொண்ட யுத்தங்களுக்கு காரணமாகிவிடக்கூடும் எனில் அத்தகைய நிலைமைகளிலும் அத்தேசிய இன பாட்டாளி வர்க்கமே அவ்விடுதலைக் கோரிக்கையை எதிர்க்க வேண்டும். இது உலகப் பாட்டாளி வர்க்க நலன்களுக்குப் பொதுவாக மட்டுமின்றி ஒடுக்கப்படும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கத்தின் குறிப்பான நலன்களுக்கும் கூட அவசியமானது. இது “முழுமையையும் பொதுவையும் ஏற்றுக் கொள்வதற்கான, பொதுவின் நலன்களுக்கு பகுதியின் நலன்கள் கீழ்ப்பட்டவை” என்பதற்கான போராட்டமாகும். இப்போராட்டம் ஒடுக்கப்படும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கம் சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்துடன் ஒற்றுமையைப் பேணுவதற்கும் தேசிய, சர்வதேசிய வர்க்கப் போராட்ட நலன்களுக்கும் அவசியமானதாகும்.
பல்தேசிய இன அரசு சமூகத்தில் பாட்டாளி வர்க்கக் கட்சி

ஒடுக்கும், ஒடுக்கப்படும் தேசிய நலன்களைக் கொண்ட ஒரு பல்தேசிய இன அரசு சமூகத்தில் பாட்டாளி வர்க்கக் கட்சி எப்படி அமைய வேண்டும்? ஒரு அரசின் கீழ் ஒரு கட்சி என்ற கோட்பாட்டின்படியா, ஒரு தேசிய இனத்திற்கு ஒரு கட்சி என்ற கோட்பாட்டின்படியா?

பாட்டாளி வர்க்கக் கட்சி ஒவ்வொன்றும் ஒரு வேலைத்திட்டத்தைக் கொண்டதாகும். ஒன்றுக்கு மேற்பட்ட வேலைத்திட்டங்களுடன் ஒரு கட்சி இயங்க முடியாது. அவ்வாறான நோக்கில் ஒரு பல்தேசிய இன அரசு சமூகத்தில் ஒடுக்கும் தேசிய இனம் மட்டுமே சலுகையாக சுயநிர்ணய உரிமை பெற்றதாக இருக்கிறது. மற்ற ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு அவ்வுரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. ஒடுக்கும் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கம் தனது சொந்த ஆளும் வர்க்கங்களை எதிர்த்த வர்க்கப் போராட்டத்தை எதிர்க்கொள்ளும் அதே வேளையில் ஒடுக்கப்படும் தேசிய இனத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கம் உடனடியாக தேசிய விடுதலை மூலம் தேசிய அரசு அமைத்தல் என்ற கடமையினை எதிர்கொள்கிறது. எனவே இரு தேசிய இன பாட்டாளிகளுக்கும் வேலைத்திட்டம் ஒன்றாக இல்லை. இந்நிலையில், அவை எதிர்க்கொள்ளும் வேறுபட்ட கடமைகளின் காரணமாக அவை தனித்தனி கட்சிகளாக அமைவதே தர்க்கப் பொருத்தமாகும்.

ஆனால் ஒடுக்கும் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கம் பலமாகவும், புரட்சியை முன்னெடுத்துச் செல்லும் நிலையிலும் இருக்குமாயின் (இரசியா, சீனா போல) இரு தேசிய இன பாட்டாளிகளும் ஒரே வேலைத்திட்டத்தின் கீழ் ஒரே கட்சியில் இணைவதும் சாத்தியமே. அதாவது ஒடுக்கும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கம் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து ஆதரித்து அதற்காகப் போராடுமாயின் ஒடுக்கப்படும் தேசிய இனப் பாட்டாளி வர்க்கம் தேசிய விடுதலை என்ற தனது கோரிக்கையை தானும் சுயநிர்ணய உரிமை என்பதாக மாற்றிக் கொண்டு அத்துடன் ஒரே கட்சியில் ஒன்றிணைய முடியும் என்பது சாத்தியம் என்பது மட்டுமல்ல. இத்தகைய நிலைமையில் இதுவே பாட்டாளி வர்க்க சர்வதேசியமும் ஆகும்.

எனவே ஒரு பல்தேசிய இன அரசு சமூகத்தில் பாட்டாளி வர்க்கக் கட்சி, அரசு எல்லையின் அடிப்படையில் அமைவதா? தேசிய இன பிராந்திய எல்லை அடிப்படையில் அமைவதா? என்பது முற்றிலும் ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தின் பலத்தையும், நடத்தையையும் சார்ந்தே இருக்கிறது.

இவ்வாறு கூறும்போது இது பாட்டாளி வர்க்க ஒற்றுமைக்கு எதிரானது என்றும் பிளவுபடுத்துவது என்றும், ஒருமைப்படுத்தப்பட்ட பெரிய அரசை பிளவுபடுத்தி அதன் மூலம் பொருளுற்பத்தி வளர்ச்சிக்கும் வர்க்கப் போராட்ட நலன்களுக்கும் உள்ள கூடுதலான, சாதகமான நிலைமைகளைக் கெடுக்கும் பிற்போக்கு நடவடிக்கை என்றும், ஏற்கெனவே ஒரு அரசுக்குள் ஒன்றுபட்டுள்ள பல்தேசிய இன மக்களை தேசிய இன ரீதியில் பிளவுபடுத்துவது என்றும், வர்க்கப் போராட்டத்தை கைவிடுவது தேசிய வாதத்துக்குப் பலியாவது என்றும் கூறப்படும் விமர்சனங்களை நாம் அறிவோம் (இதுவரை இத்தகைய விமர்சனங்களைச் சார்ந்தே தவறான நிலைப்பாடுகளை நாமும் கொண்டிருந்தோம்) ஆனால் இவை அனைத்தும் மார்க்சிய - லெனினியத்துக்கு உட்படாத தவறான விமர்சனங்களே. உண்மையில் இந்த விமர்சனங்கள் எந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் வைக்கப்படுகின்றனவோ அந்தக் கோட்பாடுகளே இந்த விமர்சனங்களுக்குரியனவாகும்.

ஒடுக்கும் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கம் பிற்போக்கு ஊட்டம் பெற்றிருக்கும்போது அல்லது பலவீனமாயிருக்கும்போது ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் பிரிந்து செல்வதால் பாட்டாளி வர்க்க ஒற்றுமையும், வர்க்கப் போராட்ட நலனும் பலம் பெறும் விசயத்தை அயர்லாந்து, நார்வே பிரச்சினைகள் மூலம் லெனின் தெளிவுப்படுத்தியதை ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டியுள்ளோம். எனவே ஒரு தேசிய இனம் பிரிந்து சென்று தனி தேசிய அரசு அமைக்கிறது என்றாலே அது பாட்டாளி வர்க்க ஒற்றுமைக்கு எதிரானது என்ற வாதம் தவறானதும் உண்மைக்குப் புறம்பானதும் ஆகும். பல சமயங்களில் பாட்டாளி வர்க்க ஒற்றுமைக்கும் வர்க்கப் போராட்ட நலனுக்கும் பிரிவினை அவசியமாகிறது என்பதே உண்மை.

எனவே பருண்மையான நிலைமைகள் குறித்த ஆய்வின்றி ஒரு அரசின் எல்லைக்குள் ஒரு கட்சி என்ற கோட்பாடு முன் வைக்கப்படுமானால் அதில் ஏகாதிபத்தியப் பொருளாதாரவாதம் மட்டும் எஞ்சியிருக்கும்.

பாட்டாளி வர்க்கம் இரண்டு வகையில் அமைந்த அரசு எல்லைகளை மட்டுமே ஜனநாயகப் பூர்வமானதாக ஏற்றுக் கொள்கிறது. முதலாவது: தேசிய இன அடிப்படையில் - மொழி உணர்வு அடிப்படையில் அமைந்த தேசிய அரசு எல்லைகள் இத்தகைய எல்லைகளை இயற்கையானது என்று எங்கெல்சும் “ஜனநாயக முறையிலானது’” என்று லெனினும் அழைத்தார்கள். மற்றொன்று ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் தாமாக விரும்பி பிரிந்துபோகும் உரிமையுடன் இணைந்து அமைத்துக் கொண்ட அரசு எல்லைகள். இதை ‘ஜனநாயக ரீதியான மையப்பாடு’ என்று லெனின் அழைத்தார்.

இவ்விரு ஜனநாயக ரீதியிலமைந்த அரசு எல்லைகளைத் தவிர்த்து வல்லாதிக்கத்தின் மூலம் அமைந்த அரசு எல்லைகளை “ஜனநாயக முறையில்” மக்கள் உணர்வுகளைக் கவனித்து மீண்டும் திருத்தி வரையும் சோசலிஸ்டுகளின் கடமை குறித்தே லெனின் வலியுறுத்தினார்.

அவர் எப்போதுமே வல்லாதிக்கத்தின் மூலம் வரையப்பட்ட அரசு எல்லைகளைப் பொருட்படுத்தவில்லை. மாறாக “குறிப்பிட்ட அரசின் வரலாற்றில் எம்மாறுதல்கள் நிகழ்ந்தாலும், பூர்ஷ்வாக்களால் தனி அரசுகளின் எல்லைகள் எவ்வாறு மாற்றப்பட்டாலும் பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமை நீடிப்பது பற்றி மட்டுமே அவர் கவலைப்பட்டார். சுயநிர்ணய உரிமையின் காரணமாக இரசியா தனித்தனி குடியரசுகளாகச் சிதறிவிடும் என்றவர்களுக்குப் பதில் சொல்லும்போது “இதற்காக நாம் அஞ்சவில்லை, சுதந்திரக் குடியரசுகளின் எண்ணிக்கை எத்தனையானாலும் நாம் அஞ்சவில்லை. அரசு எல்லைகள் எப்படி வரையப்பட்டிருக்கின்றன என்பது நமக்கு முக்கியமானதல்ல. ஆனால் எல்லா தேசியங்களையும் சேர்ந்த உழைக்கும் மக்கள் முதலாளிகளுக்கு எதிரான போராட்டத்தில் தேசிய இன வேறுபாடின்றி தொடர்ந்து கூட்டாக இருப்பதுதான் நமக்கு முக்கியமானது” என்றார்.

“அரசியல் ரீதியில் பிரிந்துபோகும் சுதந்திரம்-இது அரசின் எல்லைக் கோடுகளை வரைவதைக் குறிக்கிறதா” என்ற லெனின், இரசியாவில் “எந்தக் குறிப்பிட்ட தேசிய வளர்ச்சிப் பாதையைப் பற்றியும் உத்திரவாதம் அளிக்க முடியாது” என்றும் “உதாரணமாக உக்ரேய்ன் ஒரு சுதந்திர அரசாக அமையுமா என்பது முன்கூட்டியே அறியமுடியாத ஆயிரம் காரணங்களால் தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்று” என்றும் கூறினார். பின்னர் பின்லாந்து, போலந்து தேசிய இனங்கள் தனித்தனி நாடுகளாகப் பிரிந்து சென்றதை லெனின் அங்கீகரித்தார்.

இவை எல்லாம் பாட்டாளி வர்க்க ஒற்றுமையைப் பாதுகாப்பதற்காக மீண்டும் அரசு எல்லைகளை ஜனநாயக ரீதியில் வரைவது பற்றிதான் மார்க்சிஸ்டுகள் கவலைப் படுகிறார்களே தவிர பலாத்காரமாக வல்லாதிக்கமாக உருவாக்கப்பட்ட அரசு எல்லைகளைப் பாதுகாப்பது பற்றியல்ல என்பதைத் தெளிவுபடுத்தப் போதுமான சான்றுகளாகும்.

“முதலாளித்துவ உற்பத்திச் சக்திகளின் விரிவான, துரிதமான வளர்ச்சிக்கு பரந்த அரசியல் ரீதியில் நெருக்கமான ஒன்றிணைந்த ஐக்கியப்பட்ட பிரதேசங்கள்தான் தேவை” என்றும், “மத்திய கால ஒற்றுமையிலிருந்து எதிர்கால அனைத்துலக சோசலிச ஐக்கியத்துக்கான பாதையில் இந்தப் பெரிய அதிகார மையப்பாடு பெற்ற அரசானது வரலாற்று ரீதியில் பிரமாண்டமான முன்னேற்றம், முதலாளித்துவத்துடன் பிரிக்க முடியாதபடி இணைந்த அத்தகையதொரு அரசின் வழியாகத்தான் எந்த ஒரு பாதையும் சோசலிசத்தை நோக்கிச் செல்ல முடியும்” என்றும், “பாட்டாளி வர்க்கம் எவ்வளவு பெரிதாக முடியுமோ அவ்வளவு பெரிதான ஓர் அரசை உருவாக்கவே முயல்கிறது. காரணம் இது உழைக்கும் மக்களுக்குச் சாதகமானது. இது தேசங்களை ஒன்றுக்கொன்று மேலும் நெருக்கமாக இணையச் செய்கிறது. அவை வருங்காலத்தில் முற்றிலும் இணையும்படி செய்கிறது” என்றும் லெனின் எழுதியிருப்பதை சுட்டிக்காட்டி, வல்லாதிக்க முறையில் அமைந்த பெரிய பல்தேசிய இன அரசுகளின் எல்லைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வாதிடுகின்றவர்களின் கூற்றை, அதாவது, பல்தேசிய இன அரசு என்பது பின்தங்கிய நிலையைக் குறிக்கிறது அல்லது அது ஒரு விதிவிலக்கு என்கிற காவுத்ஸ்கியின் வாதத்தை ஆதரித்தபோதும், “ஆயினும் மையப்பாட்டை ஆதரிக்கும்போது நாம் ஜனநாயக மையப்பாட்டையே ஆதரிக்கிறோம் என்பதை மறந்துவிடுவது மன்னிக்க முடியாதது” என்று கூறியபோதும், சிறிய நாடுகளைவிட பெரிய நாடுகளை இயல்பாக மார்க்சியவாதிகள் விரும்புவதற்கு முதல் நிபந்தனையாக “மற்ற எல்லா நிலைமைகளும் சரிசமமாக இருக்க வேண்டும்” என்பதை வலியுறுத்தியபோதும், “ஆனால் இந்த நோக்கங்களை வன்முறை மூலம் அடைவதற்கு விரும்பவில்லை; மாறாக அனைத்து தேசங்களின் தொழிலாளர் மற்றும் உழைக்கும் மக்களின் சுதந்திரமான சகோதர ஒற்றுமை மூலம் மட்டுமே அடைய விரும்புகிறது” என்ற இந்தக் கூற்றை லெனினே மறுத்துவிடுகிறார்.

பல்தேசிய இன அரசின் கீழ், அது வல்லாதிக்கத்தால் ஏற்பட்டதுதான் என்றாலும்கூட பொருளாதார ரீதியிலான இணைப்பும், குவிவும் ஏற்பட்டு விட்டதை சுட்டிக் காட்டி இந்நிலையில் பிரிவினை என்பது பிற்போக்கானதும், சாத்தியமற்றதுமாகும் என்று வாதிட்டவர்களுக்கு எதிராக இது “ஏகாதிபத்தியப் பொருளாதாரவாதம்” என்று லெனின் பதில் அளித்தார். மக்களின் மொழி, உணர்வுகள் அடிப்படையில், தேசிய இன அடிப்படையில் அவர்களுடைய உணர்வுகளையும் சித்தத்தையும், மதித்து அரசு எல்லைகளை மறுவரைவு செய்யாமல் ஏகாதிபத்தியங்கள் ஏற்கெனவே இராணுவ ரீதியில் கைப்பற்றி பொருளாதார ரீதியில் இணைத்துவிட்டதை முற்போக்கானது என்றும், அதைப் பிரிப்பது பொருளுற்பத்தி வளர்ச்சிக்குத் தடை என்றும் போலந்து நண்பர்கள் வாதிட்டார்கள். இதை “ஏகாதிபத்தியப் பொருளாதார வாதமே” என்று லெனின் அடையாளம் காட்டினார்.

மேலும் இங்கிலாந்துடன் அயர்லாந்து கொண்டிருந்த நெருக்கமான பொருளாதாரப் பிணைப்பும், சார்பும் மார்க்ஸ் அயர்லாந்து விடுதலைக்கு ஆதரவு தருவதைத் தடுக்கவில்லை என்பதையும், ஏகாதிபத்தியத்தின் கீழ் பொருளாதாரச் சார்பு கொண்டவையாக மாறிவிட்ட காலனிகளின் விடுதலைகூட இந்த ஏகாதிபத்திய பொருளாதாரவாதிகளின் கருத்தோட்டத்தில் பிற்போக்கானதாக சாத்தியமற்றதாக மாறிவிட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அடுத்து ஒரே அரசு எல்லைக்குள் இணைந்து இருக்கும் பல்தேசிய இன மக்களை பிளவுபடுத்துவது என்ற அவர்களுடைய மறுப்பும் கூட ஏகாதிபத்தியப் பொருளாதாரவாதமே. தேசிய ஒடுக்குமுறையின் கீழ் மக்கள் ஒன்றுபட்டு இருக்கிறார்கள் என்ற கருத்தே பொய்யானதாகும். எனவே அவர்களை பிளவுபடுத்துவது என்ற பிரச்சினைக்கே அங்கு இடம் இல்லை. மார்க்சிஸ்டுகள் எல்லா விசயங்களையும் போலவே தேசம், தேசிய இனம் என்பவற்றையும் வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையிலேயே அணுகுகின்றனர். அவை நிரந்தரமானவை என்றோ இறுதியானது என்றோ பாதுகாக்கப்பட வேண்டியது என்றோ அவர்கள் கருதவில்லை. ஆனால் வரலாற்றிலிருந்து அவற்றை நீக்குவதற்கு முன்னால் அவற்றின் வரலாற்றுப் பாத்திரத்தை அங்கீகரித்து அவற்றுக்கு முழுச் சுதந்திரமும் ஜனநாயகமும் தரப்பட வேண்டும் என்றும் அவற்றின் முழு வளர்ச்சிப் போக்கிலேயே தேசிய இனங்கள் ஒன்றோடொன்று ஜனநாயக ரீதியில் கலந்து இறுதியில் மறையும் என்றும் கருதுகிறார்கள். ஆனால் முதலாளித்துவவாதிகள் மக்களின் இந்த உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில்லை, மாறாக ஒடுக்குகிறார்கள். எல்லைகளை தமது பொருளாதாரத் தேவைகளாக மட்டுமே கருதி விரிவுபடுத்தி வல்லாதிக்கங்களை நிறுவுகிறார்கள். இது முற்றிலும் ஜனநாயக விரோதமானது; மக்களிடையே தேசியப் பூசல்களை உருவாக்கக் கூடியதும் பிற்போக்கானதும் ஆகும். “தேசிய இனங்களை ஒடுக்குகின்ற கொள்கை என்பது தேசங்களைப் பிரிக்கின்ற கொள்கை” என்றும் “மக்களுடைய மனங்களைத் திட்டமிட்ட வகையில் கெடுக்கின்ற கொள்கை” என்றும் லெனின் சொன்னார். பல்வேறு தேசிய இனங்கள் ஒன்றுபடுவது, இரண்டற கலப்பது என்பது தேசிய இன ஒடுக்குமுறை வல்லாதிக்கங்கள் மூலமாக அல்ல. மாறாக தேசிய இனங்கள் அனைத்தும் தேசிய விடுதலை என்ற இடைக் கட்டத்தைக் கடந்த பின்பே அது சாத்தியமாகும் எனப் பாட்டாளி வர்க்கம் அறைந்து கூறுகிறது. லெனின் கூறினார் “எவ்வாறு ஒடுக்கப்படும் வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்ற இடைநிலைக் காலத்திற்குப் பிறகுதான் வர்க்கங்களை மனித சமுதாயம் ஒழிக்க முடியுமோ அதே போல ஒடுக்கப்படும் எல்லா தேசிய இனங்களுக்கும் முழு விடுதலை என்ற அதாவது பிரிந்து போவது என்றால் அதற்குத் தடையேதும் இல்லை சுதந்திரம் உண்டு என்கிற இடைநிலைக் காலத்திற்குப் பிறகுதான் தேசிய இனங்கள் தவிர்க்க முடியாத வகையில் ஒன்றுபடுவது, இரண்டறக் கலப்பது என்ற நிலையை அடைய முடியும்” .

தேசியப் போராட்டத்திற்கு பாட்டாளி வர்க்கம் தலைமையேற்பது தேசியவாதம் என்றும், வர்க்கப் போராட்டத்தைக் கைவிடுவதாகும் என்றும் கூறப்படும் வாதங்களும் தவறானவையே; “தேசியத் தன்மை கொண்ட ஒரு போராட்டத்தில் தேசியப் போராட்டம் என்னும் வடிவத்தை வர்க்கப் போராட்டம் பெறுகிறது” என்றார் மாவோ. “பாட்டாளி வர்க்கம் தன்னையும் தேசத்தினுள் ஒரு பகுதியாக்கிக் கொள்ளாமல், தானும் தேசியத்தன்மை பெறாமல் (இச்சொல் முதலாளித்துவ அர்த்தத்தில் அல்ல) அது பலம் பெற முடியவில்லை, பக்குவம் பெறமுடியவில்லை, உருவாக முடியவில்லை” என்றார் லெனின். “உழைக்கும் மக்களுக்கு ஒரு தேசமும் இல்லை” என்று கூறிய மார்க்சும் எங்கெல்சும் தேசிய அரசுகள் உருவாகும்போது பாட்டாளி வர்க்கத்தின் பாத்திரம் ஓரளவுக்கு விசேசமானது என்று கூறினார்கள். தேசிய யுத்தங்களுக்கும் அறைகூவல் விடுத்தார்கள். “கம்யூனிஸ்டுகள் எவ்வித பூர்ஷ்வா தேசியவாதத்துக்கும் எதிராக நிற்கும் அதே நேரத்தில் தம் மக்கள் பற்றிய கவலையேபடாத தேசிய சூனியவாதிகளின் ஆதரவாளர்களும் அல்லர்” என கம்யூனிஸ்டு அகிலத்தின் ஏழாவது காங்கிரஸ் அறிக்கையும் கூறுகிறது. எனவே பாட்டாளி வர்க்கம் தேசிய இயக்கத்திற்கு தலைமை ஏற்பது என்பது பூர்ஷ்வா தேசியவாதமோ வர்க்கப் போராட்டத்தைக் கைவிடுவதோ அல்ல என்பது தெளிவு. ஆனால் தேசிய இயக்கத்திற்கு பாட்டாளி வர்க்கம் தலைமை ஏற்க மறுப்பது தேசிய ஒடுக்குமுறைக்கு ஆதரவாக நிற்கும் ஏகாதிபத்தியவாதமாகவே (காலனிய அடிமைவாதமாகவே) இருக்கும். உண்மையில் தேசிய இயக்கத்திற்குத் தலைமை ஏற்பது என்பது பூர்சுவா ஜனநாயகப் புரட்சியை பூர்சுவா தேசியவாதத்திலிருந்து மீட்டு பாட்டாளி வர்க்கப் புரட்சியின் ஒரு அங்கமாக நடத்தி முடிப்பதேயாகும்.

  - பகலவன்

No comments:

Post a Comment