இந்துத்துவாவின் பாசிசக் கூட்டு
-மார்சியா கேசலாரி
விலை: 45/-
புதுமை பதிப்பகம்
7200260086
இந்துத்துவப்
பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.சைத் தோற்றுவித்தவரும் ஹெட்கேவரின் ஆசானுமாகிய
பி.எஸ்.மூஞ்சே, இத்தாலிய பாசிசச் சர்வாதிகாரி சிக்னோர்
முசோலினியை 1930ஆம் ஆண்டுகளில் சந்தித்து அவர்களின் பாசிச
அமைப்புகளின் செயல்பாடுகளையும் வடிவங்களையும் அறிந்து வந்து, இந்தியாவில் அதே போன்ற பாசிசத் தன்மையும் நோக்கமும் கொண்ட ஆர்.எஸ்.எஸ்.
அமைப்பைக் கட்டியமைத்தார்.
இந்த
உண்மைகள் அனைத்தையும் இத்தாலிய ஆய்வாளர் மார்சியா காசலோரி “1930-களில் இந்துத்துவாவின் அந்நியக் கூட்டு வரலாற்று பூர்வமான ஆவணச்
சாட்சியம்” என்ற ஆய்வில் ஜனவரி 22, 2000ஆம் ஆண்டு “எகனாமிகல்
அண்டு பொலிடிக்கல் வீக்லி” எனும் பத்திரிகையில் வெளியிட்டார். இந்த ஆவணமானது இந்து
மகா சபை, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் கோரமான பாசிச
முகமூடியை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. இந்த ஆவணத்தின் தமிழ்ப்
பதிப்பே இந்நூல்.
1920-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டம் இந்தியாவில்
மிகவும் பலமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது அந்தமான் சிறையில் இருந்த சாவர்கர்,
சுதந்திரப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்துப் பிரிட்டன்
ஏகாதிபத்தியவாதிகளின் காலில் விழுந்து உயிர்ப் பிச்சை கேட்டு 1921-ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டு, இந்து மகா சபைக்குத்
தலைவரானார். பிறகு அந்தக் கும்பல் முழுவதும் காலனியாதிக்கவாதிகளின் தாசர்களாக
மாறினார்கள்.
1920-ஆம் ஆண்டுகளில் அவர்கள் இரண்டு முடிவுகளுக்கு வந்தனர். ஒன்று இந்திய
மக்களை அச்சுறுத்துவது ஆங்கிலேய ஏகாதிபத்தியம் அல்ல மாறாக இஸ்லாமியர்களே என்று
வரையறுத்தனர். இரண்டு இஸ்லாமியர்களை எதிர்த்த ஒரு தீவிர இராணுவ அமைப்பு தேவை
என்றனர். அதன் பிறகு இந்து தேசியம் என்ற ஒரு கோட்பாட்டு வரையறையை “இந்து என்பவர்
யார்? என்ற பிரசுரத்தில் சாவர்கர் முன்வைத்தார். அதன்
விளக்கம் “இந்து என்பவன் இந்தியாவைத் தந்தை நாடாகவும் (பித்ரு பூமி); புனிதப் நாடாகவும் (புனித பூமி) கருத வேண்டும் என்றார். மாறாக இந்திய
முஸ்லீம்களுக்கும், கிறித்துவர்களுக்கும் புனிதப் பூமி
அரேபியாவிலும் பாலஸ்தீனத்திலும் இருப்பதால் அவர்களின் பித்ரு பூமியைப் புண்ணியப்
பூமியாகக் கருத இயலாது என்றார்.
அதன்
பிறகு 1930ஆம் ஆண்டுகளில் ஐரோப்பிய பாசிசச் சக்திகளான முசோலினியும், ஹிட்லரும் இனத் தூய்மை என்ற பெயரில் யூதர்களைக் கொன்றொழித்தது போலவே,
இந்தியாவில் ஆரிய இனத்தைத் தூய்மைப்படுத்துவதற்கு இஸ்லாமியர்களை
விரட்டி அழிக்க வேண்டும் என்று கூறினார்.
இதையே
கோல்வால்கர் “நாம் அல்லது நமது தேசியத்தை வரையறுத்தல்” எனும் நூலில் அடால்ஃப்
ஹிட்லர் பாணியில் விளக்குகிறார்.
“இன்று எல்லோரும் ஜெர்மனியின் தேசியக் கர்வத்தைப் பற்றி பேசுகிறார்கள். தன்
தேசிய இனம் மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையைத் தக்கவைத்துக் கொள்ள ஜெர்மனி,
செமத்தி இனங்களை யூதர்களை அழித்து உலகத்துக்கு அதிர்ச்சியைக்
கொடுத்தது. அங்கே மிக உயர்ந்த அளவில் தேசியக் கர்வம் காணப்படுகிறது. அடிப்படையில்
வேறுபாடுகளைக் கொண்ட இனங்களும் கலாச்சாரங்களும் ஒற்றுமையுள்ள ஒரே அமைப்பாக
ஒருங்கிணைவது அநேகமாக முடியாது என்பதை ஜெர்மனி எடுத்துக்காட்டியிருக்கிறது.
இந்துஸ்தானில் இருக்கும் நமக்குக் கற்கவும் லாபமடையவும் அது ஒரு நல்ல பாடம்”
இத்தகைய
வெறிபிடித்த ஆரிய இனக் கோட்பாட்டின் மூலத்தையும் ஏகாதிபத்தியம் ஆற்றிய
பாத்திரத்தையும் ஆராய்வதுதான் இவர்களின் உண்மையான முகத்தை அறிந்துகொள்ள உதவும்.
ஆரிய
இனக் கோட்பாட்டின் அடிப்படைகள்
இந்திய
நாகரீகம் குறித்த இனவாதக் கோட்பாடு எந்தக் காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது என்று
பார்த்தால், அது, ஐரோப்பாவிலும்
அமெரிக்காவிலும் அடிமைமுறை ஒழிக்கப்பட்ட பின்பு, மக்களை
ஒடுக்கும் புதிய கருவியாக இனக் கோட்பாடு (Racial Theory)
பரிணமித்தது.
கிழக்கிந்திய
கம்பெனி அரசுகள் தங்களின் அதிகாரத்தை, மக்களை இனவாத
வழியில் பிளவுபடுத்துவது, முரண்பாடுகளைப் உருவாக்குவது,
அந்த முரண்பாடுகளை பயன்படுத்துவது என்ற வழியில் நிலைநிறுத்திக்
கொண்டனர். நிறக் கோட்பாடு, உடலியல் கோட்பாட்டின்
வகைப்படுத்தலைத் தொடர்ந்து மொழியியல் கோட்பாட்டை முன்வைத்தனர்.
அதாவது
மொழிக் குடும்பம் என்பது பொது வேர்ச் சொல், மூலச் சொற்கள்
என்று ஆய்வு செய்து, ஒரே மூலச் சொற்களைக் கொண்டவையே என்று
வரையறுத்தனர். அந்த வரையறையின் படி இந்தோ ஆரியன் மொழிகள் ஒரே மொழிக் குடும்பமாகக்
கருதப்பட்டது. இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்பது ஆரிய மொழிக் குடும்பமாக
வைக்கப்படுகிறது. வேர்ச் சொற்களின் ஒற்றுமையின் அடிப்படையில் ஆரிய மொழிக்
குடும்பத்தை வரையறை செய்ததோடு காலனியாதிக்கத்தைத் திணிப்பதற்கு ஆரிய மேன்மை,
ஆரிய மேலாதிக்கக் கோட்பாடு முன்வைக்கப்படுகிறது. ஆரியர்கள்தான்
உயர்ந்தவர்கள், அவர்கள்தான் உலகத்தில் நாகரீகத்தை, பண்பாட்டைக் கொண்டுவந்தவர்கள் என்ற கோட்பாடு முன்வைக்கப்படுகிறது. இவ்வாறு
ஐரோப்பிய காலனிய மேலாதிக்கத்திற்கு ஆரிய மேன்மை என்ற கோட்பாடு உருவாக்கப்பட்டது.
ஆரிய மொழிக் குடும்பத்தின் மூலமொழி தேடலின் போது சமஸ்கிருதமே மூலமொழி என்று
கூறினர். இந்தியாவிலிருந்த ஆரியரையும் இணைத்துக் கொண்டு ஆரிய மேன்மை பேசினர்.
இதுதான் காலனியவாதிகளால் உருவாக்கப்பட்ட ஆரிய இனக் கோட்பாடு. மக்களைப்
பிளவுபடுத்தவும், வர்க்க ரீதியாக அணிதிரள்வதைத் தடுக்கவும்,
மதக் கலவரங்களைத் திட்டமிட்டுத் தயாரிக்கவும் காலனியாதிக்கவாதிகளால்
உருவாக்கப்பட்ட இந்த ஆரிய இனக் கோட்பாட்டை மூர்க்கமாக இந்தியாவில் செயல்படுத்தும்
காலனியாதிக்கத் தாசர்கள்தான் ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவப் பாசிசச் சக்திகள்.
இவர்கள்
எப்படி 1920-ல் துவங்கி இரண்டாம் உலக யுத்தம் வரைக்கும் பாசிச இத்தாலியின் அரசியலும்
அதற்கடுத்தபடியாக நாஜி ஜெர்மனியின் அரசியலும் தங்களின் செயல்பாட்டிற்கு உத்வேகம்
கொடுக்கக் கூடிய மூலமாகக் கருதினார்கள் என்பதை எந்தச் சந்தேகத்திற்கும் இடம்
தராமல் மிகத் தெளிவாக அம்பலப்படுத்துகிறது இந்நூல்.
இந்துத்துவப்
பாசிசக் கூட்டை அறிந்து கொள்வது என்பது ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறது. அதாவது
இந்தியாவில் இந்துத்துவத்தை எதிர்த்த போராட்டம் என்பது ஆரிய இனக் கோட்பாட்டை
உருவாக்கிக் கொடுத்து அதற்கு உண்மையான முதுகெலும்பாகத் திகழும் ஏகாதிபத்தியக்
காலனியாதிக்கவாதிகளை எதிர்த்த போராட்டத்தின் ஒரு பகுதியே. மாறாக வெறும் இந்து மத
எதிர்ப்பு, பார்ப்பனர் எதிர்ப்பு பேசுவது அதன் உண்மையை
மூடிமறைப்பதேயாகும்.
ஆகவே
இந்துத்துவப் பாசிசத்தை எதிர்த்து ஒரு சரியான செயல்தந்திரத்தை உருவாக்குவதற்கு
இந்நூல் துணைபுரியும் என்பது தெள்ளத் தெளிவு. காலத்தின் தேவைகருதி இந்த நூலைப்
புதுமை பதிப்பகம் வெளியிடுகிறது. இதைத் தமிழில் சிறப்பாக மொழியாக்கம் செய்த தோழர்
மாறன் அவர்களுக்கும் மற்றும் தட்டச்சு, மெய்ப்பு,
அச்சு பணி செய்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பிரதீப்
பதிப்பாளர்
No comments:
Post a Comment