Tuesday 25 April 2017

அரசு சாரா தன்னார்வ அமைப்புகளின் உண்மை சொரூபம்

அரசு சாரா தன்னார்வ அமைப்புகளின் உண்மை சொரூபம்
-பி.ஜே.ஜேம்ஸ்
விலை: 230/-
புதுமை பதிப்பகம்
7200260086

அரசு சாரா தன்னார்வ அமைப்புகளின் உண்மையான செயல்பாடு என்பது உளுத்துப்போன சமூக அமைப்பை பாதுகாத்து, ஏகாதிபத்திய சுரண்டலை நியாயப்படுத்துவதாகும். இதன் உண்மைத் தன்மையை ஆய்வதற்கு அரசு சாரா தன்னார்வ அமைப்புகளின் தத்துவம் மற்றும் அரசியல் செயல்பாடுகளை புரிந்துகொள்வதற்கு நாம் சர்வதேசிய சூழலிலிருந்து இப்பிரச்சினையை அணுகவேண்டும்.
முதலாளித்துவ சமூக அமைப்பு என்பது மிகு உற்பத்தி நெருக்கடியை அடிப்படையாகக் கொண்டது. இந்த சமூக அமைப்புக்குள்ளேயே இந்நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அல்லது தீர்வு காண்பதற்கு சாத்தியமில்லை என்று சமூக விஞ்ஞான ரீதியான புரிதல் மட்டுமல்ல கடந்தகால வரலாறும் நமக்கு அதையே தான் நிரூபித்துள்ளது. ஆளும் வர்க்கங்கள் இந்நெருக்கடியை உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதன் மூலம் தீர்வுகான முயல்கிறது. நெருக்கடியின் சுமைகளை தாங்கமுடியாமல் உழைக்கும் மக்களின் அவலக்குரல் கேட்டவண்ணம் உள்ளது. இந்த சுமைகளை எதிர்த்து போராடும் மக்களின் உண்மையான போராட்டங்களை திசைதிருப்பியும் அதன் வர்க்க சாராம்சத்தை மூடிமறைத்தும் ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்யும் கோடாரி காம்புகளாக அரசு சாரா தன்னார்வ அமைப்புகள் செயல்படுகிறன.
அரசு சார அமைப்புகளின் வர்க்க குணாம்சத்தை பார்க்கும்போது இவர்கள் புதியதொரு வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்றே கருதலாம். இவர்கள் பூர்வீக சொத்துடமை அல்லது அரசின் ஊதியத்தை சார்ந்து வாழ்பவர்கள் அல்ல. குறிப்பிட்ட சில முக்கியமான மக்கள் திரள் அமைப்புகளை கட்டுப்படுத்தும் தமது சொந்த ஆற்றலையும் ஏகாதிபத்தியத்திடம் பணம் வாங்குவதையும் சார்ந்து வாழ்பவர்கள். ஒரு புதிய வகைப்பட்ட தரகு கூட்டத்தினர்களே இவர்கள். சமுதாயத்திற்கு அவசியமான எந்த உற்பத்தியிலும் இவர்கள் ஈடுபடுவதில்லை. தமது சொந்த ஆதாயத்திற்காக உள்நாட்டு ஏழ்மையை வைத்து, நிதி உதவி அளிக்கும் எஜமானர்களுக்கு தொண்டூழியம் செய்து பணம் பார்ப்பவர்கள். மொத்தத்தில் ஏகாதிபத்திய தரகு அதிகார வர்க்க கூட்டம் தான் அரசு சாரா தன்னார்வ நிறுவனங்கள்.
ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை எதிர்த்து சவால்விடும் அளவுக்கு பரந்துபட்ட மக்கள் இயக்கங்களின் எழுச்சிகள் நடந்தபோதுதான் அரசு சாரா நிறுவனங்கள் பல்கி பெருகின. ஒரு நாட்டை அடிமைப்படுத்துவதற்கு ஏகாதிபத்தியங்கள் இரண்டு வழிமுறைகளை பின்பற்றுகிறது. ஒன்று, இராணுவ ரீதியாக போரிட்டு அடிமைப்படுத்துவது, இரண்டு, ஏகாதிபத்திய நிதி உதவி பெறும் அரசு சாரா தன்னார்வ அமைப்புகள் மூலம் வர்க்கப் போராட்டத்தை நீர்த்துப் போக செய்து தனக்கான பொம்மை ஆட்சியை நிறுவுவது. இவ்வாறு இந்த சுரண்டல் சமூக அமைப்பை கட்டிக் காப்பாற்றும் விதமாக அரசு சாரா தன்னார்வ அமைப்புகளை ஏகாதிபத்தியவாதிகள் ஊட்டி வளர்க்கின்றன.
குறிப்பாக இந்தியாவில் இத்தகைய தன்னார்வ அமைப்புகள் தங்களின் ஆக்டோபஸ் கரங்களை கடந்த 10 ஆண்டுகளாக பலப்படுத்தியுள்ளன. 400 இந்தியர்களுக்கு ஒரு என்.ஜி.. என்ற கணக்கில் 50,000 அரசு சாரா அமைப்புகள் இந்தியாவில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதில் 35 லட்சம் என்.ஜி..க்கள் இருக்கின்றனர். இதில் சராசரியாக இவர்களுக்கு ஓராண்டுக்கு ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து வரும் வெளிநாட்டு நிதி மட்டும் 1 லட்சம் கோடியாகும் என்று இந்திய உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதில் அதிக நன்கொடைகளை பெற்ற மாநிலங்களாக முறையே டில்லி ரூ.2,285.75 கோடி, தமிழ்நாடு ரூ.1,704.76 கோடி மற்றும் ஆந்திர பிரதேசம் ரூ. 1,258.52 கோடியாகும். அதிக நன்கொடை பெற்ற மாவட்டங்களிலே ரூ.889.99 கோடி பெற்று சென்னை முதலிடத்தில் உள்ளது. மும்பை ரூ.825.42 கோடியும், பெங்களூரு ரூ.818.48 கோடிகள் பெற்று இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளது. பெரும் எண்ணிக்கையில் நிதி வழங்கும் நாடுகளில் முறையே அமெரிக்கா ரூ. 3,838.28 கோடி, இங்கிலாந்து ரூ. 1,219.02 கோடி, ஜெர்மனி ரூ.1,096.01 கோடி வழங்குகின்றன.
இவ்வாறு பெரிய தொகை ஏன் இவர்களுக்கு கொடுக்கப்படுகிறது என்றால் உலகமயமாக்கலுக்குப் பிறகு ஏகாதிபத்திய நிர்ப்பந்தத்தின் காரணமாக அரசு மக்களுக்கு செய்யவேண்டிய பல வேலைகளிலிருந்து பின்வாங்கிவிட்டது. கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற துறைகளில் நிதியை வெட்டிவிட்டன. இது மக்களின் அனைத்து வாழ்வுத் துறையிலும் மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்த்த மக்களின் வர்க்கப் போராட்டத்தை திசைதிருப்பி அதை அடையாளப் போராட்டமாக மாற்றவும்தான் அரசு சாரா அமைப்புகளுக்கு ஏகாதிபத்தியவாதிகள் பல கோடிகளைக் கொட்டிக் குவிக்கின்றன. ஏகாதிபத்திய தாச கும்பலான அரசு சாரா தன்னார்வ அமைப்புகள் செயல்பாடு ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தை திடப்படுத்துவதே.
இந்தியாவைப் பொருத்தவரை தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போன்ற அனைத்து வாழ்வுத் துறையிலும் மிகக் கடுமையான நெருக்கடிக்குள்ளான சூழலில், இதற்கான ஒரே தீர்வுதான் உள்ளது. அது என்னவென்றால்? இத்தகைய நெருக்கடிகளுக்கு காரணமான ஏகாதிபத்திய சுரண்டலுக்கு முடிவு கட்டி புதிய காலனிய ஆதிக்கத்தையும் பின்தங்கிய உற்பத்தி உறவுகளையும் மாற்றியமைத்து ஒரு புதிய சமூக மாற்றத்தை நிகழ்த்தும் போதுதான் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும்.

எனவே நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக அதன் தொங்கு சதையான  அரசு சாரா தன்னார்வ அமைப்புகளையும் எதிர்த்துப் போராடுவது நமது கடமையாகும். அவர்களின் உண்மையான முகத்தைக் காட்டவும் எதிர்த்துப் போராடவும் இந்நூல் ஒரு சரியான பாதையை வகுக்கத் துணைபுரியும்.