Sunday 26 March 2017

மத்திய கங்கைச் சமவெளியில் அரசு மற்றும் வருண உருவாக்கம்


மத்திய கங்கைச் சமவெளியில் அரசு மற்றும் வருண உருவாக்கம்

விலை: 85/-
புதுமை பதிப்பகம்
7200260086

இந்திய சமூக பொருளாதார படிவங்கள் பற்றி, முடிவெடுப்பதற்கான நோக்கத்திலிருந்து பண்டைய இந்திய சமூக பொருளாதார, அரசியல் ஆய்வுகளை புதுமை பதிப்பகம் வெளியிட்டு வருவதன் தொடர்ச்சியாக ஆர்.எஸ்.சர்மாவின் மத்திய கங்கைச் சமவெளியில் அரசு மற்றும் வருண உருவாக்கம்  என்ற இந்த நூலை கொண்டுவருகிறோம்.

இந்தியாவில் குறிப்பாக மத்திய கங்கைச் சமவெளியில் அரசு மற்றும் வருண அமைப்பு எவ்வாறு உருவாகியது என்பதை தொல்லியல் ஆதாரங்களுடன் அவைகள் உருவாவதற்கான உண்மையான பொருளியல் காரணிகளை ஆய்வு செய்யும் நூல் இது.

பண்டைய இந்திய சமூக அமைப்பில் எப்போது தனியார் சொத்துடைமை தோற்றம் பெற்றது என்றால், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் காரணமாக குறிப்பாக NBPW (Northern Black Polished Ware) இரண்டாம் கட்டத்தில் விவசாயத்தில் இரும்பு பயன்படுத்தப்பட்டபோதுதான் தனிச்சொத்துடைமை தோற்றம் பெற்றது.

விவசாய உற்பத்தியில் இரும்பின் பயன்பாடு அதாவது இரும்பானது உற்பத்தியில் ஆற்றிய பாத்திரம் என்பது வேளாண்மயமாக்கலுக்கும், அதனைத் தொடர்ந்து கைவினைத் தொழில் வளர்ச்சிக்கும்; வர்த்தக நடவடிக்கைகளுக்கும், குடியேற்றப் பகுதிகளின் பரப்பளவு மிகவும் அபரிமிதமாக அதிகரிக்கவும் வழிவகுத்தது.

இதன் பின்னர் ஏற்பட்ட மிகைஉற்பத்திதான் தனிச்சொத்து டைமையை தோற்றுவித்தது. இந்த தனிச் சொத்துடைமை தான் சமனற்ற பங்கீட்டை சமூகத்தில் உருவாக்கியது. இவையே படிநிலையாக்கப்பட்ட வருண சமுதாயத்தின் உருவாக்கத்திற்கான அடிப்படையாகும். தனியார் சொத்துடமையின் தோற்றத்திற்குப் பிறகுதான் தொழில்களின் அடிப்படையில் வருணங்கள் உருவாயின. விவசாயம் மற்றும் தனிச்சொத்தின் அதிகரிப்பிற்கு பிறகு சத்திரிய வருணம் தோன்றிய பின்னர்தான் அரசு ஸ்தாபிக்கப்பட்டது. தனிச்சொத்தின் தோற்றத்தோடு வருணங்களின் உருவாக்கம் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது என ஆர்.எஸ்.சர்மா கூறுகிறார்.

இந்தியாவில் நிலவிவரும் வருணம், சாதிகளை  இந்துமதமும், பார்ப்பனியமும்தான் உருவாக்கின என்ற வாதத்தை இந்நூலின் ஆய்வுகள் ஆதாரபூர்வமாக மறுக்கிறது. வருணம் சாதி இவை அனைத்தும் நிலத்தில் ஏற்பட்ட தனிச்சொத்துடைமையின் அடிப்படையில் அமைந்த உழைப்புப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டவை என்பதை இந்நூல் விளக்குகிறது.

மேலும், இந்தியாவில் ஆசிய உற்பத்திமுறை நிலவியது என்றும் நிலத்தில் தனிஉடமை இல்லை என்றும் பிரிட்டிசார் வரும்வரை இந்திய சமூகம் மாறாநிலை சமூகமாக ஒரு தேங்கிய சமூகமாக இருந்தது என்ற நிலைபாடு தவறு என்பதையும் இந்நூல் தெளிவுபடுத்துகிறது.

மார்க்சிய ஆய்வுமுறையின் அடிப்படையில், தொல்லியல் தரவுகளை முன்வைத்து பண்டைய இந்திய சமூக அமைப்பு முறையை ஆதாரப்பூர்வமாக நிறுவுகிறார் ஆர்.எஸ். சர்மா. இத்தகைய ஒரு தனிச் சிறப்பான, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நூலை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் புதுமைப் பதிப்பகம் மகிழ்ச்சியடைகிறது. இந்நூலை தமிழில் எளிய நடையில் மொழிபெயர்த்து உதவிய தோழர் வான்முகில் அவர்களுக்கு எமது நன்றி.

பிரதீப்
பதிப்பாளர்

No comments:

Post a Comment