Sunday 26 March 2017

மாபெரும் விவாதம்

மாபெரும் விவாதம்


விலை: 650/-
புதுமை பதிப்பகம்
7200260086


இந்தியாவில் கம்யூனிச இயக்கங்களின் நிலையைப் பற்றி கூறவேண்டும் என்றால் நமக்கு 1908 ஆம் ஆண்டின் ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைதான் நினைவுக்கு வருகிறது.

1908 ஆம் ஆண்டு முதல் ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேக்க நிலையின் பிரதானக் காரணம் கலைப்புவாதமே என்று லெனின் வரையறை செய்தார். கலைப்புவாதத்தை முறியடித்த பிறகுதான் ரசியக் கம்யூனிஸ்ட் கட்சி அடுத்த கட்டத்திற்குச் சென்று மாபெரும் நவம்பர் புரட்சியை நடத்தி முடித்தது.

இன்றைக்கு இந்தியாவில் கம்யூனிச இயக்கங்கள் பலவீனப்பட்டு கிடப்பதற்கு மிக முக்கியமான காரணம் கலைப்புவாதமே. இந்தக் கலைப்புவாதத்தை முறியடிக்காமல் கம்யூனிச இயக்கங்களின் வளர்ச்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.

கலைப்புவாதம் என்றால் கம்யூனிஸ்ட் கட்சியை அனைத்துத் துறையிலும் மார்க்சிய லெனினியத்திற்கு எதிரான சித்தாந்தங்களை முன்வைத்துக் கம்யூனிஸ்ட் கட்சியை ஒழித்துக் கட்டுவதுதான் கலைப்புவாதத்தின் சாரம். அதாவது தத்துவத் துறையில் இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்திற்குப் பதிலாக எண்ணமுதல்வாதத்தை முன்வைப்பது, அரசியல் துறையில் ஏகாதிபத்தியம் பாட்டளிவர்க்க புரட்சிகர சகாப்தம் பற்றிய லெனினியக் கோட்பாடுகள் பொருந்தாது என்று கூறி அதீத ஏகாதிபத்தியம் என்ற காவுத்ஸ்கி நிலைபாட்டை முன்வைப்பது மற்றும் அமைப்புத் துறையில் கம்யூனிஸ்டுக் கட்சியை ஒரு வெளிப்படையான முதலாளித்துவக் கட்சியாக மாற்றிவிடுதல் ஆகியவையே. இந்தக் கலைப்புவாதத்திற்கு சேவை செய்வதுதான் நவீன திருத்தல்வாதம்.

நவீன திருத்தல்வாதத்தின் ஆணி வேர் எங்கு உள்ளது? ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது காங்கிரசில் குருசேவ்வால் முன்வைக்கப்பட்ட அறிக்கைதான் நவீன திருத்தல்வாதத்தின் அடிப்படையாகும்.
குருச்சேவ் தலைமையிலான 20வது காங்கிரஸ் அறிக்கையில், உலக நிலைமைகளில் “புரட்சிகர மாற்றங்கள்” ஏற்பட்டுள்ளன என்ற சாக்குப்போக்கின் அடிப்படையில், குருச்சேவ் “சமாதான வழியில் மாற்றம்” என்ற கோட்பாட்டை முன்வைத்து, “பாராளுமன்றப் பாதையின் மூலம்” முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறிச் செல்வது சாத்தியமாகியுள்ளது என்று கூறினார்.

சாராம்சத்தில் இந்தத் தவறான கோட்பாடு, அரசு மற்றும் புரட்சி பற்றிய மார்க்சிய லெனினிய போதனைகளின் தெளிவான திரிபு ஆகும். இதன் தொடர்ச்சியாக ஏகாதிபத்தியம், போர், அமைதி பற்றிய லெனினிய போதனைகளைக் கேள்விக்குள்ளாக்கி “அமெரிக்க அரசாங்கமும்; அதன் தலைமையும் யுத்தத்தை எதிர்க்கும் சக்திகளேயன்றி, அவை யுத்தத்தை உருவாக்கும் ஏகாதிபத்தியச் சக்திகளின் பிரதிநிதிகள் அல்ல” என்று கூறித் தனது ஏகாதிபத்தியத் தாசத் தன்மையை வெளிப்படுத்தினார் குருச்சேவ்.
குருச்சேவ்வின் நவீன திருத்தல்வாதத்திற்கு இரையாகி உலக முழுவதிலும் உள்ள கம்யூனிச இயக்கங்கள் பெரும் பின்னடைவும், பிளவும் சந்தித்தன. இதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விதிவிலக்கல்ல.

மாவோ தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சர்வதேசப் போக்கைக் குறித்து ஒரு சரியான திசை வழியை முன்வைத்து, ஸ்டாலின் எதிர்ப்பு என்ற பெயரால் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கைவிட்டு, மார்க்சிய லெனினியக் கோட்பாடுகளை திருத்தியதன் மூலம் தனது ஏகாதிபத்திய ஆதரவை வெளிப்படுத்திய குருச்சேவ்வின் நவீன திருத்தல்வாதத்தை முறியடித்து மார்க்சிய லெனினியத்தை உயர்த்திப் பிடித்து முன்வைக்கப்பட்ட மாபெரும் கருத்தாயுதம்தான் இந்த “மாபெரும் விவாதம்” நூல்.

இந்நூல் 1988 ஆம் ஆண்டு கேடயம் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டது. இந்தியக் கம்யூனிச இயக்கத்தில் புரையோடிப் போயுள்ள, நவீன திருத்தல்வாதத்தை எதிர்த்த போராட்டத்தின் தேவையைக் கருதி இந்நூல் புதுமைப் பதிப்பகத்தால் வெளியிடப்படுகிறது. இந்நூலினைத் தட்டச்சு, மெய்ப்பு, வடிவமைப்பு மற்றும் அட்டைப்பட வடிவமைப்பு ஆகியவை செய்து உதவிய அனைத்துத் தோழர்களுக்கும், கேடயம் வெளியீட்டகத்திற்கும் எமது நன்றி.

பிரதீப்
பதிப்பாளர்

No comments:

Post a Comment